நமது சிறப்பு நிருபர்
இந்திய கடற்படையின் தலைமையில், “கடலோர கண்காணிப்பு-24′ (சீ விஜில்}24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
2008}இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் சுமார் 11,098 கி.மீ. கடற்கரையும், 24 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிரத்யேக பொருளாதார மண்டல
மும் கடலோரப் பகுதியில் உள்ளன.
இவற்றை உள்ளடக்கிய இந்த விரிவான பயிற்சி, மீனவ சமுதாயத்தினர் கடலோர மக்கள், பல்வேறு கடலோரப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து கடல்சார் பங்குதாரர்களையும் ஒரே நேரத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு கடல் வழியாக வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
இந்த நடவடிக்கைகளை மேம்படுத்தக் கூடிய வகையில் இந்த “சீ விஜில்’ பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்தப் பயிற்சி முன்னெப்போதும் இல்லாத அளவில் விரிவாக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு குழும செயலக அதிகாரிகள், மாநில கடல்பகுதி காவல் துறை, கடலோரக் காவல்படை, சுங்கத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட ஆறு மத்திய அமைச்சகங்கள், 21 அமைப்புகள் மற்றும் முகமைகள் பங்கேற்புடன் நவ. 20, 21}ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.

