மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மொத்தம் 288 தொகுதிகளுக்கும் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை மகாயுதி கூட்டணியாகவும், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகியவை மகா விகாஸ் அகாடி கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மகாராஷ்டிராவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா சந்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சிமுர் எனும் பகுதியில் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார். இந்தப் பேரணியில் அவர், “காங்கிரஸ் நமது ஒற்றுமையை சீர்குலைக்கும்” என விமர்சித்து இருக்கிறார்.
அந்தப் பேரணியில் அவர் பேசியதாவது; “உங்கள் ஒற்றுமையை காங்கிரஸ் உடைக்கும். பழங்குடி சமூகம் சாதிகளால் பிரிந்தால் அது உங்களின் அடையாளத்தையும் வலிமையையும் இழக்க செய்யும்.
எனவே நாம் காங்கிரஸின் சதிவலையில் வீழக்கூடாது. நாம் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம். நீங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் காங்கிரஸ் உங்களின் இட ஒதுக்கீட்டை பறித்துவிடும்.
மகா விகாஸ் அகாடி கூட்டணி பெரும் ஊழல் கூட்டணி. அவர்கள் வளர்ச்சிப் பணிகளை தடுப்பதில் முனைவர் பட்டம் முடித்தவர்கள். அதிலும், காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரண்டு பி.எச்டியை முடித்திருக்கிறது.
இதையும் படியுங்கள் :
“தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
நாடு முழுக்க ஒரே அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் வர ஏழு சகாப்தங்கள் (70 வருடம்) ஆனது. காஷ்மீரில் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சியும் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டுவர நீங்கள் அனுமதிப்பீர்களா?
அரசியல் லாபத்திற்காக காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வன்முறையையும் பிரிவினைவாதத்தையும் செய்கிறது. 370 சட்டப்பிரிவை நாம் நீக்கி, காஷ்மீரை மொத்தமாக இந்தியாவுடன் இணைத்துள்ளோம்” என்று பேசினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
