மத்திய – மாநிலத்திற்கிடையிலான வலிமைமிகு பங்காளித்துவம் எண்ணெய், கியாஸ் தொழில்துறை வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப் கூறினார்.
சரவாக் கடற்பகுதியில் எண்ணெய், கியாஸ் எடுப்பது தொடர்பிலான குறித்து தற்போது நிலவி வரும் போட்டா போட்டிக்கு பரஸ்பர தீர்வை நோக்கி மத்திய அரசாங்கமும் சரவாக் மாநில அரசாங்கமும் இரு தரப்புக்கும் சாதகமான முடிவைக் காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தன்னுடைய எல்லைக்குட்பட்ட கிடைக்கப் பெறும் அனைத்து வளங்கள் மீதும் சரவாக் உரிமை கோரி வருகிறது. சரவாக்கைப் பொறுத்தவரை கடலடி கண்டப் பகுதி கிட்டத்தட்ட 100 மைல்கள் (160கிலோ மீட்டர்) நீள்கிறது என்று கபோங்கான் பார்ட்டி சரவாக் கூட்டணியின் மூத்த தலைவருமான ஃபடிலா குறிப்பிட்டார்.
1963 மலேசிய ஒப்பந்த உணர்வின் அடிப்படையில் தன்னுடைய வளங்களுக்கு அதிக ஆளுமை அதிகாரத்தை சரவாக் கேட்டு வருகிறது.
1974 பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் நாட்டின் ஒட்டுமொத்த கடலோர, கரையோர எண்ணெய், கியாஸ் வளங்களுக்கு பெட்ரோனாஸ் முழு உரிமைத்துவத்தை கொண்டிருப்பதோடு பிரத்தியேக அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது என்று ஃபடிலா தெரிவித்தார்.
அதேசமயத்தில் 1958 சரவாக் மாநிலத்தின் எண்ணெய், சுரங்க சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருப்பது போல் கடலோர எண்ணெய், கியாஸ் தொழிலுக்கு சரவாக் உரிமை பெற்றிருக்கிறது. 1969ஆம் ஆண்டு தேசிய அவசரக் காலம் பிரகடனம் செய்யப்பட்ட பிறகு அந்த உரிமை ரத்து செய்யப்பட்டது.
அவசர காலத்தின்போது மத்திய அரசாங்கம் மட்டுமே சட்டங்களை உருவாக்க முடியும். அதனால்தான் அந்த சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று அவர் சொன்னார்.
2011 ஆம் ஆண்டில் அவசர காலம் நீக்கப்பட்ட பின்னர் அச்சட்டம் உயிர்ப்பிக்கப்பட்டது என்று மாநில அரசாங்கம் வாதிடுகிறது. இதன் வழி தன்னுடைய அனைத்து எண்ணெய், கியாஸ் வளங்கள் மீதான அதன் உரிமைகளை சரவாக் மாநிலம் நிலைநிறுத்துகிறது.
இதனை அடுத்து சரவாக் மாநில சட்டப் பேரவை 2016 கியாஸ் விநியோகச் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டமானது கியாஸ் எடுக்கும் பெட்ரோனாஸின் பங்கை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் எடுத்துக்கொள்வதற்கு சரவாக் அரசாங்கம் உரிமை பெற்றது.

மேலும், இச்சட்டமானது சரவாக் மாநிலத்திற்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பெட்ரோஸ் மாநிலத்தின் இயற்கை திரவ கியாஸை வாங்குவது, விற்பது, விலை நிர்ணயிப்பது, சப்ளை, விநியோகம் ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு பொறுப்பேற்றது.
இவ்விவகாரம் தொடர்பிலான பெட்ரோனாஸ்– பெட்ரோஸ் இடையிலான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெட்ரோனாஸ் தொடர்ந்து கடலோரமும் பெட்ரோஸ் கரையோரமும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஒரு வணிக ஒப்பந்தத்தைக் காணும் என்று ஃபடிலா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இரு தரப்புகளும் அவற்றின் சொந்த நலன்களை, உரிமைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் ஒரு நியாயமான ஏற்பாடு செய்யப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக மத்திய எரிபொருள் பரிமாற்றம், நீர் உருமாற்றம் துறை அமைச்சருமான ஃபடிலா குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசாங்கம் இடையே இரு தரப்புக்கும் சாதகமான ஓர் ஏற்பாட்டை எட்டவேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார்.
பரஸ்பர பலன்கள்
எண்ணெய், கியாஸ் தோண்டும் உரிமைகளை பெட்ரோஸுக்கு வழங்கும் சரவாக்கின் நடவடிக்கை மாநிலத்தின் எண்ணெய், கியாஸ் தொடர்பான வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கு சந்தேகத்திற்கிடமின்றி வழிவகுக்கும்.
அதேசமயத்தில் கூச்சிங் அதன் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இது அனுமதிக்கும். தற்போது எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை கியாஸ் உற்பத்தியில் 95 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சரவாக் கியாஸ் ரோட்மேப் 2030க்குக் கீழ் உள்நாட்டுப் பயனீட்டிற்கு 30 விழுக்காட்டை கையிருப்பில் வைப்பதற்கு மாநில அரசாங்கம் விரும்புகிறது.
இப்போதைக்கு போதுமான எல்என்ஜி விநியோகத்திற்கு சரவாக் உத்தரவாதம் அளித்திருக்கிறது. இதன்வழி பெட்ரோனாஸ் தன்னுடைய ஜப்பான் உட்பட நடப்பு ஏற்றுமதி ஒப்பந்தங்களை நிறைவு செய்வதற்கு அனுமதி அளிக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தங்கள் காலாவதியானதும் அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லை.
இருப்பினும், சரவாக்கில் பெட்ரோனாஸின் ஈடுபாடு கட்டுப்படுத்தப்பட்டால் பாதிப்பை ஏற்படுத்தும் என்று துறை சார்ந்த தொழில்துறை பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான முடிவானது எண்ணெய், கியாஸ் துறையில் மலேசியாவுக்கும் சரவாக்கிற்கும் எவ்வித பலனையும் கொண்டு வரப் போவதில்லை என்று அவர்கள் நினைவுறுத்தினர். மலேசியாவின் எண்ணெய், கியாஸ் துறையின் நட்சத்திர மாநிலமாக சரவாக் திகழ்கிறது. ஆனால், பெட்ரோனாஸ் அம்மாநிலத்தில் இருப்பதால்தான் ஒரு வலிமைமிகு வெற்றியை காண முடிகிறது.
எண்ணெய், கியாஸ் உற்பத்தி, விநியோகத்திற்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. குறிப்பாக, கடலோர எண்ணெய் தோண்டுவதற்குரிய கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. மேலும், சரவாக்கின் உள்நாட்டு எண்ணெய் , கியாஸ் துறைக்கும் ஆசியான் பிந்துலு உர உலைக்கும் பிந்துலுவிலுள்ள எல்என்ஜி கட்டடத்தின் கட்டமைப்புகளுக்கும் மிகப் பெரிய பணம் செலவிட வேண்டியுள்ளது.
சரவாக்கின் எண்ணெய், கியாஸ் தொழில்துறை வளங்களுக்கு மத்திய அரசாங்கம் குறிப்பிடத்தக்க பணத்தை வழங்கியிருக்கிறது. அவற்றுள் ஏற்றுமதிக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மற்ற அரசாங்கங்களுடன் வணிக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதும் அடங்கும்.
தென்சீனக் கடல் பகுதியில் சீனக் கப்பல்களின் வருகை, பல அத்துமீறல் நடவடிக்கைகள் ஆகியவற்றை சமாளிப்பதற்கு நாட்டின் ஆயுதப் படைகளை சரவாக்கின் கடல் பகுதியில் மத்திய அரசாங்கம் நிறுத்தியிருப்பதும் அடங்கும்.
பெட்ரோனாஸ் பெற்றுள்ள அனுபவங்களையும் ஆலோசனைகளையும் குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை பெறுவதற்கு பெட்ரோஸ் சேவைக் கட்டணம் வழங்கவேண்டும். இத்தொழில் துறையை எப்படி நடத்துவது. ஏற்ற இறக்கங்களை எவ்வாறு சமாளிப்பது என்பதில் பெட்ரோனாஸ் அதீத அனுபவம் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
பெட்ரோஸ் 2018ஆம் ஆண்டில்தான் உருவாக்கப்பட்டது. போதுமான அனுபவங்களைப் பெறுவதற்கு அவசியம் இருக்கிறது. எண்ணெய் தோண்டுதல், உற்பத்தி, விநியோகம் போன்றவற்றை அந்நிறுவனமே சுயமாகச் செய்யும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத இத்துறை சார்ந்த ஓர் ஆய்வாளர் தெரிவித்தார்.
மனித மூலதனத்தைப் பெற்றுவிடலாம் என்பது உண்மைதான். ஆனால், உடனடியாக முழு நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்பது சாத்தியமில்லை. எனவே, தற்போது நிலவி வரும் உறவுகளை பாதிக்கச் செய்வதால் எந்த தரப்புக்கும் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.


