இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் வெற்றிகரமாக நிறுவனங்களை உருவாக்கி அதனை நிர்வகிக்கின்றனர் மற்றும் சொகுசு வீடுகள், தனியார் ஜெட் விமானங்கள், படகுகள் போன்றவற்றுடன் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அப்படிப்பட்ட கோடீஸ்வரரான ஒருவர் ஆரம்பத்தில் முடிதிருத்தும் தொழிலை செய்தார். இப்போது தொழில்முனைவராக இருக்கும் இவரிடம் 400க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கிறது. பெங்களூரில் வசிக்கும் ரமேஷ் பாபு, இந்தியாவின் பணக்கார முடிதிருத்தும் நபராவர். இவரிடம், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடிஸ் மேபேக், ஜாகுவார், பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் ஃபோர்டு மஸ்டாங்ஸ் போன்ற சொகுசு மாடல்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருக்கிறார். அதன் மதிப்பு பல நூறு கோடிகள் இருக்கும்.
பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபு ஒரு வெற்றிகரமான கார் வாடகை தொழிலை நடத்தி வருகிறார். 1993 ஆம் ஆண்டு மாருதி ஆம்னியை வாங்கி கூடுதல் வருமானத்திற்காக வாடகைக்கு விட்டதன் மூலம் அவரது தொழில் பயணம் தொடங்கியது. ஆனால் இன்று அவர் ஏராளமான உயர் ரக கார்களை வைத்திருக்கிறார் மற்றும் இவரது கார்களை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அமீர் கான், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ரமேஷ் பாபுவின் தந்தையும் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி ஆவார். இவருக்கு 7 வயது இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது மாமா அந்த கடையைக் எடுத்து நடத்தி வந்தார். நிதி சிக்கல்களை எதிர்கொண்ட ரமேஷ் பாபு, சிறுவயதிலிருந்தே குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் படிக்கும் காலத்திலேயே செய்தி தாள் விநியோகம், பால் விநியோகம் போன்ற பல தொழில்களை செய்து வந்தார். பள்ளிப்படிப்பை முடித்த அவர் தனது மாமாவிடமிருந்த சலூனை வாங்கி மீண்டும் எடுத்து நடத்தினார். சலூனை பார்த்துக்கொண்டே எலக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ முடித்தார்.
அவருடைய சலூனில் நல்ல வருமானம் ஈட்டியதை அடுத்து, தனது மாமா உதவியுடன் 1993 ஆம் ஆண்டில் ஆம்னி காரை வாங்கியுள்ளார். சலூனில் அவர் எப்போதும் பிஸியாகவே இருப்பதால், ஆம்னியை வாடகைக்கு விட முடிவு செய்தார். அப்போது அவர் எடுத்த அந்த முடிவு தான் அவரை கோடீஸ்வரனாக உயர்த்தியது. ஆம்னியை வாடகைக்கு விடுவதால் நல்ல லாபம் கிடைத்தது. இதன் மூலம் மேலும் பல கார்களை வாங்கினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த தொழிலைச் செய்து வருகிறார். இன்று, பெங்களூர் மட்டுமின்றி டெல்லி, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இவர் சேவையை விரிவுப்படுத்தியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் செடானை சுமார் ரூ.38 லட்சத்திற்கு வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து மெர்சிடிஸ் மேபேக் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் போன்ற சொகுசு வாகனங்களை வாங்கினார். இதன் மதிப்பு ஒவ்வொன்றும் தோராயமாக ரூ. 3 கோடி ஆகும். இப்போது அவரிடம் 400 கார்கள் உள்ளன. அதில் 120 சொகுசு கார்கள் ஆகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
