– 41 வயதான பெண் ஒருவருக்கும் தொடர்பு
– பயன்படுத்திய ஆயுதம், முச்சக்கரவண்டி மீட்பு
கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியாபான பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவரைக் கொன்று இருவரைப் படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் மரணம்
இக்கொலையை மேற்கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியால் சுட்ட சந்தேகநபர், குற்றத்தை தொடர்ந்து பயன்படுதிய ஆயுதம் மற்றும் அதற்கான தோட்டாக்கள் 5 ஆகியவற்றை வைத்திருந்த சந்தேகநபர், குற்றத்திற்கு ஆதரவளித்த மேலும் 5 சந்தேகநபர்கள மற்றும் பெண் சந்தேகநபர் ஆகிய 8 பேர், நேற்று (03) வெல்லவாய, அஹங்கம, மிதிகம ஆகிய பிரதேசங்களில் வைத்து, மாத்தறை பிரிவுக்குரிய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டின் பின்னர், ஆயுதத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அஹங்கம, வெலிகம, வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 42 வயதுடையவர்கள் எனவும், பெண் சந்தேகநபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கி வைத்திருந்த சந்தேகநபரிடம், ஹெரோயின் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படுவதோடு, அவரிடம் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்டதாக கருதப்படும் ரூ. 1,542,000 பணத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இவர் வெளிநாட்டிலிருந்து இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒருவரின் நெருங்கிய நபர் என்பதும் தெரியவந்துள்ளது.
மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சுட்டுக் கொலை செய்த சம்பவம்; 8 சந்தேகநபர்கள் கைது appeared first on Thinakaran.

