இலங்கை அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறாததால். 2 ஆவது விருப்ப வாக்குகளை எண்ணும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று(21ம் தேதி) நடந்த நிலையில், நேற்று இரவு முதலே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடிய விடிய வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸநாயக்க முன்னிலையில் இருந்தார்.
தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அவர், பின்னர் சரிவை சந்தித்து 39.65% வாக்குகள் மட்டுமே பெற்றார். இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவுக்கு 34.09% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.47% வாக்குகளும் கிடைத்தன. இலங்கைத் தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு 4ஆம் இடம் கிடைத்த நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே 3 சதவீத வாக்குகளை கூட பெறாமல் 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்த முடிவுகளில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டவில்லை. இதனால் 2 ஆவது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவது இதுவே முதல்முறையாகும். இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் நடைமுறையின்படி, முதல் 2 இடங்களில் உள்ள அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்னநாயக்க அறிவித்தார்.
வாக்களிக்கும் போதே முதல், இரண்டு மற்றும் 3ஆவது விருப்ப வேட்பாளர்களை மக்கள் தேர்வு செய்வார்கள். வேட்பாளர்கள் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிடில் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்கள் யாருக்கு 2ஆவது அதிக விருப்பம் தெரிவித்துள்ளார்களோ அந்த வாக்குகள் அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும்.
ஒருவேளை இதிலும் முடிவு எட்டப்படவிலலை என்றால், அதாவது விருப்ப வாக்குகள் வழங்கியும் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறவில்லை என்றால், வாக்காளர்களின் மூன்றாவது விருப்ப வாக்குகள் பரிசீலிக்கப்படும். இரண்டு வேட்பாளர்களின் ஒருவர் முழுமையான பெரும்பான்மையை பெறும் வரை இவ்வாறு விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்படும்.
இதையும் படியுங்கள் :
இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்: ஏறுமுகத்தில் சஜித்; இறங்கு முகத்தில் அனுர குமார… என்ன நடக்கிறது?
சஜித்தை முதல் விருப்பமாக தேர்ந்தெடுத்தவர்கள் அனுரவை 2ஆவது விருப்பமாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு குறைவு என்றும் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அரியநேத்திரனுக்கு வாக்களித்தவர்கள் சஜித்திற்கு 2ஆவது இடம் அளித்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
