இலங்கை அதிபர் தேர்தல் நேற்று (21ம் தேதி) நடைபெற்றது. இதில், அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவருக்கிடையே மும்முனை போட்டி நிலவியது. ஆனால், நேற்று இரவு முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டு நடைபெற்றநிலையில், இந்த மும்முனை போட்டி என்பது அனுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கான இரு முனை போட்டியாக மாறியது.
இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வெற்றிக்கு தேவையான 50% வாக்குகள் கிடைக்காத நிலையில், இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று, இலங்கையின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சிங்கள தமிழர் போரில் இலங்கையில் இருந்து உயிர் தப்பி தமிழ்நாட்டிற்கு வந்த தமிழர்கள் தங்கியிருக்கும், புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்துவரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் இலங்கை தேர்தல் குறித்த பார்வை எப்படி இருக்கிறது என்பதை கேட்டறிந்தோம்.
இதில் பரமேஸ்வரி என்ற பெண், “நாங்க இங்கவந்து 30 வருடங்கள் மேலாகிவிட்டது. எனக்கு இங்கு வந்துதான் திருமணம் நடந்தது. பிறகு மகன் பிறந்தான். அவருக்கு தற்போது 30 வயதாகிறது. இங்கேயே கேம்பில் தான் வாழ்க்கையை நடத்துகிறான். எங்களின் உறவினர்கள் எல்லாம் அங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் பேசி தேர்தலை பற்றி தெரிந்துக்கொள்வோம். முன்பு போல், தற்போது பதட்டம் தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் இல்லை. விலைவாசி தான் ஏறிவிட்டது என்று சொல்கிறார்கள்.
எங்களுக்கு அங்கும் வாக்கு உரிமை இல்லை. இங்கையும் வாக்கு உரிமை இல்லை. எங்களுக்கு இதுவே தாய் நாடுபோல் ஆகிவிட்டது. இதுவே எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இங்கே எங்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு இங்கேயே வாக்குரிமை கொடுத்து என் மகன் இங்கேயே தனது வாக்கு செலுத்துவான் என்றால் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.
#JUSTIN இலங்கை அதிபர் தேர்தல்
புதுச்சேரி முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களின் மனநிலை என்ன?#SrilankaElection #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/FIcR80u8pz
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 22, 2024
லீலாவதி என்ற 64 வயது மூதாட்டி பேசுகையில், “எனக்கு 64 வயதாகிறது. 34 வயதில் இங்கு வந்தேன். ஒரு ஐந்து முறை அங்கே வாக்களித்துள்ளேன். அங்கே வாக்களித்த எங்களை கண்டந்துண்டமாக வெட்டி இங்கே அனுப்பியுள்ளார்கள். அதனால், அங்கு நடைபெறும் தேர்தல் பற்றி கவலை இல்லை. அங்கு நல்லா இருந்தாலும் சரி நல்லா இல்லை என்றாலும் சரி எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் :
Anura Kumara Dissanayake | இலங்கையின் அதிபரான இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக்க!
கமல்ராஜ் என்ற இளைஞர் பேசுகையில், “இலங்கை தேர்தல் பற்றி எனக்கு கவலை இல்லை, ஒரு இந்தியனை போல் சுதந்திரமாக நான் இங்கு வாழ்ந்துவருகிறேன். எங்களுக்கு இங்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்ற ஒரே ஒரு கவலை தான். இலங்கை பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று தெரிவித்தார்.
கீழ்புத்துப்பட்டு பகுதியில் இருந்துவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், 1990ம் ஆண்டுமுதல் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
