மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக நேற்று (செப்டம்பர் 8) அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரானதும் ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் வெளிநாடு பயணம் இது. பயணத்தின் முதல் நாளே, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார். அந்த உரையாடல் இதோ…

எதிர்க்கட்சி தலைவரின் அன்றாட பணி என்ன?
எதிர்க்கட்சியின் “இதயமே’ மக்களின் குரலை எடுத்துச் சொல்வதில்தான் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராகத் தனிநபர், குழு, தொழில்துறை, விவசாயம் ஆகியவற்றின் நலனுக்குக் குரல் எழுப்ப வேண்டும். எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதைத் தெளிவாகக் கேட்டு, கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலுக்குப் புதிதாக வரும்போது, ஒரு பிரச்னை வந்தால் அது அவ்வளவு தெளிவாகத் தெரியாது. அந்தப் பிரச்னைக்குள் ஆழமாகச் செல்லும்போது, அது சம்மந்தப்பட்ட அனைத்தும் தெரியவரும்.
அடுத்து நாடாளுமன்ற நேரங்களில், அங்கே சொல்ல வேண்டும். அது ஒரு போர்க்களம்… வார்த்தைகளின் போர்க்களம்… ஐடியாக்களின் போர்க்களம். மேலும் தினமும் கட்சி ஆட்கள் தொடங்கி விவசாயிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் சந்திக்க வருவார்கள். அத்தனை பேர் பேசுவதையும் கவனமாகக் கேட்டு புரிந்துகொள்ள வேண்டும்.

