தமிழ்நாட்டை விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பதவியேற்றதில் இருந்து உறுதிபட தெரிவித்து வருகிறார். இதற்காக பல்வேறு வகையில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் பணிகளிலும் முதல்வர் முனைப்புக் காட்டிவருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கவனிக்கம்படியாக டாடா மோட்டார்ஸ் குழுமம் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் அதி நவீன வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதேபோல், ரூ.16000 கோடி மதிப்பில் தொழிற்சாலை நிறுவ வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இவ்விரண்டு ஒப்பந்தங்களும் தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியிலும் பொருளாதார ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரிதும் கவனிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், 28ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு சென்றடைந்தார். பிறகு அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டின் மூலம், 900 கோடி ரூபாய் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த முதலீட்டின் வழியாக தமிழ்நாட்டில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவது பற்றி அந்த நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பேசியதாகவும், ஆசியாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் தமிழ்நாடு முன்னணியில் திகழும் வகையில் பல்வேறு வாய்ப்புகளையும் மற்றும் வணிக ஒப்பந்தங்களையும் வலுப்படுத்தும் முடிவுடன் அரசு செயல்பட்டுவருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
ஒருபுறம் முதலீடுகளை ஈர்த்துவரும் வேளையில் மறுபுறம் மாநிலத்தின் அடுத்த தலைமுறையினரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் வகையில் நான் முதல்வன் திட்டம் துவங்கப்பட்டு அதுவும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில் நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறனை வளர்க்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வழங்கப்படும் என்றும் இதன் மூலம், 20 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, எலக்ட்ரோலைசர் அமைப்புகள் வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வரும் ஓமியம் நிறுவனம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் தனது ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், 400 கோடி ரூபாய் முதலீடும், 500 நபர்களுக்கு வேலையும் கிடைக்க இருக்கிறது.
முதலீடுகள் ஈர்ப்பது நிறுவனங்களை பார்வையிடுவது மட்டுமின்றி, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுவருகிறார். அந்த வகையில் சான்பிரான்சிஸ்கோவில் புலம் பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், அமெரிக்காவில் தங்கிப் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு பெருமளவிற்கு வரத் துவங்கியுள்ளன. தொழில் துவங்க தமிழ்நாடு உகந்த மாநிலம் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், ஓட்டுநர் இன்றி தானியேங்கி காரில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து, பெரியாரின் இனி வரும் உலகம் புத்தகத்தில் இருந்து சில வாக்கியங்களையும் பகிர்ந்துள்ளார். அவர் பதிவில், ‘இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை!’
– தந்தை பெரியார் (இனி வரும் உலகம்) என்று தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிகாகோவில் அயலக தமிழர்களை சந்தித்து கலந்துரையாடுதல் முதலீட்டாளர்களை சந்திப்புது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இருக்கிறார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
