அதானி குழுமம் முறைகேடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் வெளிநாட்டு போலி நிறுவனங்களில், செபி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன்பெர்க் முதலீட்டு ஆய்வறிக்கையில் பரபரப்புத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பெர்க். இந்த நிறுவனம் உலகின் பெரும் நடைபெறும் நிதி நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வுகள் செய்து அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.
இதையும் படிக்க:
EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் 7 வகையான மாதாந்திர ஓய்வூதியங்கள்!
அந்த வகையில் கடந்த ஆண்டு அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்த ஹிண்டன்பெர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டன.
இந்நிலையில், புதிதாக சில ஆவணங்களை சுட்டிக்காட்டி ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்திய பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான, செபி-யின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
வினோத் அதானி முறைகேட்டுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும், பெர்முடா மற்றும் மொரீஷியஸில் உள்ள நிறுவனங்களில் செபி தலைவருக்கும், கணவருக்கும் பங்குகள் இருப்பதாகவும், இந்த நிறுவனங்களில் 2015-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து அவர்கள் முதன்முதலாக முதலீட்டை தொடங்கியதாகவும் ஹிண்டன்பெர்க் குறிப்பிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து செபி கண்டுபிடிக்க வேண்டும் என்றால், செபி தலைவர் மாதபி புரி புச்-ஐயும் விசாரிக்க வேண்டும் என்பதால், அதானி குழும முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க செபி அமைப்பு தயங்குவதாகவும் ஹிண்டன்பெர்க் விமர்சித்துள்ளது.
ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து செபி தலைவர் மாதபி புரி புச் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஹிண்டன்பெர்க் அறிக்கையை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தற்போது தான் விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
