பழங்களில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் இருப்பதால் நாம் அவற்றை விரும்பி உண்கின்றோம். நாம் உண்ணக்கூடிய பெரும்பாலான பழவகைகள் சீசன் சமயங்களில் கிடைப்பவையாக இருப்பதால் அவை எல்லா சமயங்களிலும் கிடைப்பதில்லை. அதனால் நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களையும் உண்கின்றோம்.
அப்படி நமது விருப்பப்பட்டியலில் சேர்ந்தது தான் டிராகன் ப்ரூட். இந்த டிராகன் ப்ரூட் முதலில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் 90களின் காலக்கட்டத்தில் நம் நாட்டிலும் பயிரிடப்பட்டது. நாளடைவில் இந்த டிராகன் ப்ரூட் நாட்டின் பல பகுதிகளிலும் பயிரிடப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் பல இடங்களிலும் இந்த டிராகன் ப்ரூட் பயிரிடப்பட்டது. டிராகன் ப்ரூட்டின் தேவையை விட உற்பத்தி குறைவாக இருப்பதால் இந்த பழத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது. எந்த விதமான மண்ணிலும் வளரும் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் டிராகன் ப்ரூட் பயிரிடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூரில் உள்ள வேளாங்கண்ணிபுரத்தில் டிராகன் ப்ரூட் விவசாயம் செய்யப்படுகின்றது. உள்ளூரிலே டிராகன் ப்ரூட் விளைவதால் மக்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆரம்பக்கட்டத்தில் அந்நியமாக பார்க்கப்பட்ட இந்த பழம் தற்போது கிராமப்புற விவசாயிகள் அதிகம் பயிரிடத் துவங்கியுள்ளதால் கிராமப்புறங்களிலும் விரும்பி உண்ணப்படுகிறது.
ட்ராகன் ப்ரூட் சாகுபடி குறித்து விவசாயி சூசை மாணிக்கம் கூறுகையில், “நாங்கள் எங்கள் தோட்டத்தில் திராட்சை பயிரிட்டு இருந்தோம் அதற்கு மாற்றுப் பெயராக டிராகன் ப்ரூட் பயிரிட்டுப் பார்த்தோம். இதனுடைய பதியம் நாங்கள் திருத்தணியிலிருந்து வாங்கி வந்து பயிரிட்டோம். இது பதியம் வைத்து பழம் வருவதற்கு ஒன்றரை வருஷம் ஆகிவிட்டன.
ஒன்றரை வருடம் கழித்து நன்றாக மகசூல் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது மக்களிடையே இந்த பழத்திற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இதனை விரும்பி வந்து வாங்கிக் கொண்டு செல்கின்றனர். மேலும் இந்த டிராகன் பழத்திற்கு சொட்டு நீர் பாசனமே செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல்… சுகுனி சாகுபடியில் சூப்பராய் லாபம் அள்ளும் விவசாயிகள்..
மார்ச் மாதங்களில் பழம் வர ஆரம்பித்தால் நவம்பர் வரை பழங்கள் வந்து கொண்டே இருக்கும். பூவிலிருந்து பழம் வருவதற்கு ஒரு வார கால இடைவெளி மட்டுமே ஆகும். பழத்தின் சுவைக்காகவும், இதன் மருத்துவ குணத்திற்காகவும் மக்கள் எங்கள் காட்டிற்கே நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். மேலும் நாங்கள் திண்டுக்கல்லுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
