இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று ஏற்பட்ட வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு தொடர்வதால், இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி 25 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தேசிய பங்குச் சந்தை எட்டியது முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. எனினும் அந்த உற்சாகத்திற்கு 5ஆம் தேதியே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. மேலும் வரும் நவம்பரில் அதிபர் தேர்தலும் நடைபெற இருப்பதால், அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த 12 மாதத்தில், சுமார் 25 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளதாக, பிரபலமான முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் கணித்துள்ளது.
இந்த நிலையில் தான், அமெரிக்க பங்குச்சந்தைகளில் கிடைத்த லாபத்தை, வெளியே எடுக்கும் நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதன் எதிரொலியாக இந்திய சந்தைகள் உட்பட உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக ஜப்பானில், ஒரேநாளில் 12. 4 சதவிகிதம் அளவிற்கு பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் பங்குச்சந்தை ஏற்பட மிகப்பெரிய சரிவாக இது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள், திங்களன்று கடுமையான சரிவை எதிர்கொண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், நேற்றைய வர்த்தகம் முடிவில், இரண்டாயிரத்து 222 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி, 662 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவே இந்திய சந்தைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதால் நீண்ட கால முதலீட்டாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்தாண்டு மே மாதம் 61 ஆயிரம் புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி 82,000 ஆக இருந்தது… அதாவது 15 மாதங்களில் 34% உயர்வை மும்பை பங்குச்சந்தை எட்டியது.
தற்போது அந்த உயர்வுக்கு ஏற்ப சந்தை ஒரு குறிப்பிட்ட அளவு Correction-ஐ செய்யும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். அதே நேரம் நீண்ட கால அடிப்படையில் நல்ல பங்குகளை தேர்வு செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, அமெரிக்க பங்குச்சந்தைகளில் சரிவு தொடர்வதால், இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் சரிவு நீடிக்கலாம் என்று முதலீட்டு ஆலோசகர்கள் கணித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)