நம் ஊர் வேலியோரங்களில் விளைந்து கிடக்கும் நீலக் கற்றாழையில் முள்ளால் பெயரெழுதி விளையாடியது ஒரு காலம். சில நேரங்களில் இந்தக் கற்றாழையை வெட்டி அதிலிருந்து நார்களைப் பிரித்து கயிறு எடுப்பார்கள். ஆனால், இந்தக் கற்றாழையிலேயே காசு பார்க்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்க விவசாயிகள்.

ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை, ரயில் கற்றாழை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் நீலக் கற்றாழை (Agave) மருத்துவ குணம் நிரம்பிய ஒரு தாவரம். உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனளியக்கக்கூடிய கற்றாழை. மெக்சிகோவை தாயகமாகக் கொண்ட இந்தக் கற்றாழை ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் கற்றாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் கற்றாழை வளர்க்கப்படுகிறது. எனினும், இதில் கணிசமான வருமானம் கிடைக்காது என்ற கருத்து நிலவுகிறது.

