டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதால் ஒட்டுமொத்த தேசமும் கொண்டாட்டத்தில் உள்ளது. ஜூன் 29 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அணி கோப்பையை வென்றது. ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா உட்பட அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்கள். ஆனால் இந்திய அணியினரால் ரகு என செல்லமாக அழைக்கப்படும் ராகவேந்திரா என்ற நபரைப் பற்றி பலருக்கும் தெரியாது. இந்திய அணியில் இவருக்கு என்ன வேலை? இந்த வெற்றியில் இவருடைய பங்கு என்ன?
இந்திய அணியின் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்டாக இருந்து வருகிறார் ராகவேந்திரா. இந்த தகவல் ஒரு சில ரசிகர்களுக்கே மட்டுமே தெரிந்திருக்கும். இந்திய வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் போது, அவர்களுக்கு ‘த்ரோடவுன்களை’ வீசும் அரிய திறமை ரகுவுக்கு உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு உதவக் கூடியதாக இருக்கும். இதற்கு ஏற்ற வகையில் பயிற்சி செய்ய இந்திய வீரர்களுக்கு ரகுவின் த்ரோடவுன் உதவியாக இருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளுகும் மேலாக இந்திய அணியின் நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்து வருகிறார் ராகவேந்திரா. அணிக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் தன்னால் முடிந்தளவிற்கு இவர் தொடர்ந்து செய்து வருகிறார். இவர் ஒரு சர்வதேச ஆடுகளத்தில் கூட விளையாடாமல் இருக்கலாம். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களின் திறமைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அந்த வகையில் இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் இவருடைய பங்கும் உள்ளது என தாராளமாக கூறலாம்.
இதையும் படிக்க:
கவுதம் கம்பீர் இதுவரை சாதித்தது என்ன? காத்திருக்கும் சவால் என்ன?
கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கும்டா பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. ஒரு பாரம்பரிய பள்ளி ஆசிரியரான இவரது தந்தை, கிரிக்கெட் மீதான தனது மகனின் ஆசையையும், என்றாவது ஒருநாள் நீல நிற ஜெர்சியை அணிந்து இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற தனது மகனின் கனவை அவர் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஆனாலும் ரகவேந்திரா தனது தந்தையின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தனது கிரிக்கெட் ஆர்வத்தைத் தொடர்ந் படியே இருந்தார். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) அணித் தேர்விற்கான பயிற்சியில் இவர் கலந்து கொண்டார்.
ஹூப்ளியில் தங்குவதற்கு எந்த இடமும் இன்றி, குடும்பத்தினரின் ஆதரவும் இன்றி, பேருந்து நிலையம், அனுமன் கோவில் மற்றும் சுடுகாட்டில் தங்குவது என தனது நாட்களைக் கழித்து வந்தார் ராகவேந்திரா. அவரது போராட்ட குணம் வெற்றியை தேடித் தந்தது. தார்வாட் மண்டல அணிக்காக ஒரு ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ராகவேந்திரா. மேலும் அந்த பிராந்தியத்தில் அனைவருக்கும் தெரிந்த பந்துவீச்சாளராக மாறினார். அதோடு மட்டுமின்றி கர்நாடக கிரிக்கெட் சங்க உதவியில் தங்கும் வசதியும் பெற்றார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் கையில் ஏற்பட்ட காயம் அவரது குறுகிய கால பந்துவீச்சு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது. இனிமேல் முன்பு போல் பந்துவீச முடியாது என்பதால், கர்நாடக ரஞ்சி அணிக்கு பயிற்சியாளர் பணியில் சேர்ந்தார். இதற்காக அவர் எந்த சம்பளமும் வாங்கவில்லை.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியில் இவர் 2008-ம் ஆண்டில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் இந்திய அணியின் த்ரோடவுன் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றிலிருந்து ராகவேந்திரா இந்த பதவியில் இருந்து வருகிறார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
