பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ள நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க புதின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியாவை சேர்ந்த சிலர், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட்டு வருவதாக கூறப்பட்டது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.
இந்தியர்களை மீட்பது குறித்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ரஷ்ய-உக்ரைன் போரில் 4 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், 10 பேர் நாடு திரும்பினர். ஆனால், சுமார் 40 இந்தியர்கள் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி, முதன் முறையாக 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த மோடி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட புதின், போரில் ஈடுபட்டு வரும் இந்தியர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே இவர்கள் சந்திப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவரது எக்ஸ் வலைதளப்பதிவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர், உலகின் ரத்தக்கறை படிந்த குற்றவாளியை கட்டிப்பிடிப்பதை பார்ப்பது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. அமைதி முயற்சிகளுக்கு பேரழிவு தரும் அடியாகும்.” எனப் பதிவிட்டுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
