அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.
ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில், 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று ரஷ்யா சென்றார். அவருக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். ரஷ்ய அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கை கொடுத்து அன்பை பரிமாறி கொண்டனர்.
பின்னர் மாஸ்கோவில் ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு புலம்பெயர் இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மாஸ்கோ புறநகரில் உள்ள ரஷ்ய அதிபரின் பண்ணை வீடான நோவோ கிரையோவாவிற்கு சென்ற பிரதமர் மோடியை, வாசலுக்கு நேரில் வந்து புதின் வரவேற்றார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபின் இந்திய பிரதமர் மோடி ரஷியா செல்வது இதுவே முதல் முறையாகும். அதேபோல், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பின் பிரதமர் மோடி ரஷியா செல்வது இதுவே முதல் முறையாகும். பின்னர் மின்சார காரில் பிரதமர் மோடியை அமரவைத்து அதிபர் புதின் ஓட்டிச் சென்றார். பண்ணை வீட்டிலேயே பிரதமர் மோடிக்கு விருந்து அளித்து உபசரித்த அதிபர் புதின், விரிவாக உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், எரிசக்தி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். அப்போது, இந்தியப் பிரதமராக மீண்டும் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் புதின் இதற்காக மகிழ்ச்சியடைவதாக கூறினார். முழு வாழ்கையையும் பொது பணிக்கு அர்ப்பணித்து, இந்தியாவிற்கு நல்லது செய்வதாகவும் மோடிக்கு புதின் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க : 65,000 கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வரும் சிறுகோள் – எச்சரிக்கும் நாசா!
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் நிச்சயம் இந்த சந்திப்பு நீண்ட தூரம் அழைத்து செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய – ரஷ்ய இடையேயான உச்சி மாநாடு இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று மாஸ்கோவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
