தனது கடுமையான உழைப்பாலும், விடாமுயற்சியாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் சஷி கிரன் ஷெட்டி. தன்னுடைய 29வது வயதில் வெறும் ரூ.25,000ஐ மட்டுமே முதலீடாக கொண்டு சொந்தமாக தொழில் தொடங்கினார் சஷி கிரன். இன்று அந்நிறுவனம் ஆல்கார்கோ குழுமமாக (Allcargo Group) விரிவடைந்துள்ளது. இன்று இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.13,000 கோடியாகும்.
1957-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் மங்களூருவுக்கு அருகே உள்ள பண்ட்வாலில் பிறந்தார் சஷி கிரன் ஷெட்டி. அங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை நிறைவு செய்த சஷி கிரன், வேலை தேடி 1978-ம் ஆண்டு மும்பைக்கு வந்தடைந்தார். அங்கு இண்டர்மோடல் ட்ரான்ஸ்போர்ட் மற்றும் டிரேடிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு ஃபோர்பஸ் கோகக் (Forbes Gokak) என்ற நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார்.
இதற்கிடையில் வேலையில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு தன்னுடைய 29-ஆவது வயதில் டிரான்ஸ் இந்தியா ஃப்ரைட் சர்வீஸ் (Trans India Freight Services Private Limited) என்ற பெயரில் சொந்தமாக தொழில் தொடங்கினார் சஷி கிரன். 1994-ம் ஆண்டு ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் (Allcargo Logistics) என்ற நிறுவனத்தையும் தொடங்கினார் சஷி.
இன்று இந்நிறுவனம் ஆல்கார்கோ குழுமமாக விரிவடைந்து, 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களோடு இந்தியா மட்டுமின்றி 180 நாடுகளுக்கும் மேல் அலுவலகங்களைக் கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 2,400-க்கும் மேற்பட்ட நேரடி வணிக லேன்கள் உட்பட 530 இடங்களுக்கு இந்நிறுவனம் சேவை அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள 19,800-க்கும் மேற்பட்ட பின்கோடு முகவரிகளுக்கு சரக்கு சேவைகளை கொண்டு செல்கிறது ஆல்கார்கோ குழுமம்.
இதையும் படிக்க:
தகுதியான குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்.. மத்திய அரசு கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!
உலகின் மிகப்பெரிய LCL கண்டெய்னர் இணைப்பாளராக திகழ்கிறது ஆல்கார்கோ குழுமம். கண்டெய்னர் முழுவதும் நிரப்பும் அளவுக்கு சரக்குகள் இல்லையென்றால், பல்வேறு சரக்கு வணிகர்களின் பொருட்களை ஒன்றிணைத்து, அதை செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்வார்கள். அதுதான் LCL கண்டெய்னர். ஷெட்டியுடைய நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.13,000 கோடி ஆகும்.
சஷி கிரன் ஷெட்டியின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக இருப்பது எது தெரியுமா? அவருடைய கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தொலைநோக்குப் பார்வை, காலத்திற்கு ஏற்றார்ப் போல் தொழிலில் புதுமைகளை புகுத்துதல் ஆகியவையே. இவர் வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாமல் சிறந்த நன்கொடையாளராகவும் திகழ்கிறார். கல்வி மற்றும் மருத்துவத்திற்கு தாராளமாக நிதி உதவி செய்து வருகிறார் சஷி கிரன். சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பல இளைஞர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்கிறார் சஷி கிரன்.
இதையும் படிக்க:
எல்ஐசி கொடுக்கும் சூப்பர் திட்டம்… வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சம் கிடைக்கும்! முழு விவரம்
பெரிய கனவுகளைக் கண்டு, அதை நிறைவேற்ற எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு இவருடைய வாழ்க்கையே உதாரணமாக இருக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
