தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சதம் விளாச ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது.
உலக கோப்பையை வென்றதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த அணிக்கு இளம் வீரர் சுப்மன் கில் தலைமை வகித்துள்ளார்.
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முழுவதுமாக இளம் வீரர்களை கொண்ட அணியாக ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வேயிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது.
இந்நிலையில் 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அதே ஹராரே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக கில்லும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர்.
2-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் சுப்மன் கில் கேட்ச் என்ற முறையில் ஆட்டம் இருந்து வெளியேறினார். 4 பந்துகளை சந்தித்த அவர் 2 ரன்கள் ஆட்டம் இழந்தார்.
இதன் பின்னர் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து அபிஷேக் சர்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருவரும் சிச்சரும் பவுண்டரியமாக விளாசியதால் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. குறிப்பாக அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் விளையாடியதைப் போன்று சர்வ சாதாரணமாக சிக்ஸர்களை விளாசினார். 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர் அடுத்த 13 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எடுத்து தனது சர்வதேச டி20 போட்டியில் முதல் சதத்தை அபிஷேக் சர்மா பதிவு செய்தார்.
47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர் 7 பவுண்டரியுடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அபிஷேக் சர்மா – ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதையடுத்து, களத்திற்கு வந்த ரின்கு சிங், அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 234 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்களும், ரின்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
