ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளின் அணிகள் விளையாட உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்வது குறித்த முடிவு இந்திய அரசுதான் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான வரைவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ இடம் கொடுத்துள்ளது. அதில், 7 போட்டிகளை லாகூரிலும், 5 போட்டிகளை ராவல்பிண்டியிலும், 3 போட்டிகளை கராச்சியிலும் நடத்தலாம் என்று அட்டவணையிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் மார்ச் 1ஆம் தேதி நடத்தலாம் என்று கூறியுள்ளது.
மேலும், தொடக்க ஆட்டம் கராச்சியிலும், இரண்டு அரையிறுதிப் போட்டிகள் கராச்சி மற்றும் ராவல் பிண்டியிலும், இறுதிப் போட்டி லாகூரிலும் நடத்தலாம் என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், போட்டி விவரங்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்ற நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில், இந்த பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:
தல தோனியின் பிறந்த நாள் விழாவில் சல்மான் கான் – வைரல் வீடியோ!
இதனிடையே, “இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் முடிவே இறுதியானது. இது ஐசிசி நடத்தும் தொடர் என்பதால், ஒருதலைபட்சமாக எந்த முடிவையும் எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே ஐசிசி கூட்டத்தின்போது இது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்று பிசிசிஐ அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி வெளிநாடுகளில் நடைபெற்ற பல போட்டிகளில் பாகிஸ்தான் உடன் விளையாடி இருந்தாலும், கடந்த 2008 முதல் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவில்லை. அது மட்டுமின்றி, இருதரப்பு தொடரிலும் 2012-13க்கு பிறகு இரு அணிகளும் விளையாடவில்லை. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு செல்ல இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக, அந்த போட்டி பாகிஸ்தானுக்கு வெளியே மாற்றப்பட்டது.
இதையும் படிங்க:
ஹர்திக் பாண்டியா – நடாஷா விவாகரத்து விவகாரம்…. லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடாஷா!
பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வந்தாலும், பாகிஸ்தான் அணி கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் விளையாடியது.
முன்னதாக, ஐசிசி சாம்பியன் டிராபி 2017 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, 180 ரன்கள் வித்தியாசத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது.
.
&w=750&resize=750,375&ssl=1)
