பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, அது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால், அந்த தொகை ஒரு தவணையாக கொடுக்கப்படாமல், 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்த விவசாயத் துறை நிபுணர்கள், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை வரும் ஜூலை 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது வரி செலுத்துவோர், பெண்கள் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் பல சலுகைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் வழங்கப்படும் தொகையையும் உயர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
சமையல் எரிவாயு மானியம் இந்த ஆண்டு கிடைக்குமா..? மத்திய அரசின் நற்செய்தி!
அதாவது, தற்போது ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் நிலையில், அதை ரூ.8,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளது. அண்மையில், மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி, கடந்த ஜூன் 18ஆம் தேதி வாரணாசியில் இருந்து பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 17வது தவணையை சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு விடுவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
