இந்தியாவின் பணக்கார பொற்கொல்லராக விளங்கும் வர்கீஸ் ஜாய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெறும் 100-200 கோடி அல்ல.
கடின உழைப்பு வெற்றிக்கு வித்திடும் என்று கூறப்படுகிறது. ஆனால், கடினமாக உழைக்கும் பலரும் வெற்றிபெற முடிவதில்லை. உண்மை என்னவென்றால், வெற்றிக்கு கடின உழைப்போடு, சரியான முடிவுகளை எடுப்பதும், திட்டமிடுதலும், புரிதலும் மிகவும் அவசியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கடின உழைப்பு + சரியான முடிவு = வெற்றி. இந்த ஃபார்முலாவை பின்பற்றி, நாட்டின் பணக்கார பொற்கொல்லராக இருப்பவர் ஆலுக்காஸ் வர்கீஸ் ஜாய். இவரது சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.36,500 கோடி.
ஆலுக்காஸ் வர்கீஸ் ஜாய் 1956ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவரது தந்தை 220 சதுர அடியில் கேரளாவின் திருச்சூரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். அத்துடன் அவரது குடும்பம் குடை உற்பத்தி, ஜவுளி வியாபாரம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தது. ஆனால், தங்கத்தில்தான் ஜொலிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார் ஜாய் வர்கீஸ். எனவே, பொற்கொல்லராக மாறி, புதிய டிசைன்களை உருவாக்கத் தொடங்கினார்.
நகைக்கடை கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியர்கள் பலரும் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். பலர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். அவர்களுக்கு இந்திய நகைகள் கிடைப்பது சாத்தியம் இல்லாமல் இருந்தது. இதை புரிந்து கொண்ட ஜாய் வர்கீஸ் தனது முதல் ஆலுக்காஸ் நகைக்கடை கிளையை அபுதாபியில் தொடங்கினார்.
1988ல் மற்றொரு ஆலுக்காஸ் கடையைத் திறந்த ஜாய் வர்கீஸ், 2001ஆம் ஆண்டில் துபாய் நகரில் வசித்தவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஒரு புதுமையான பரிசுத் திட்டத்தை அறிவித்தார். அதாவது, நகை வாங்கியவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு என்று அறிவித்ததும், அவரது கடை பிரபலமாகத் தொடங்கியது. துபாயில் இருந்த நகைக்கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இதையும் படிங்க : EPFல் இருந்து 8% கூடுதல் ஓய்வூதியம் பெற வாய்ப்பு – எப்படி தெரியுமா?
வியாபாரம் நன்றாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென சகோதரர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பாகப்பிரிவினை ஏற்பட்டது. 2002ல் சகோதரர்கள் 5 பேரும் நகை வியாபாரத்தை பிரித்துக் கொண்டனர். இதையடுத்து, தனது தொழிலை தனியாக வளர்த்தெடுக்க முடிவு செய்த ஜாய் வர்கீஸ் அப்போது வரை ஆலுக்காஸ் ஜூவல்லரி என்ற பெயருடன், தனது பெயரையும் இணைத்து ஜாய் ஆலுக்காஸ் என்று பெயரிட்டார்.
பின்னர் கேரளாவின் கோட்டயத்தில் 5,800 சதுரடியில் தலைமையக கடையைத் திறந்தார். அதன்பிறகு கோயம்புத்தூரில் இரண்டாவது கடையைத் திறந்த ஜாய் ஆலுக்காஸ், காரட் மீட்டரை அறிமுகப்படுத்தினார். வாடிக்கையாளர்கள் எத்தனை காரட் தங்கத்தை வாங்குகிறார்கள் என்பதை அவர்களே அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தார். மேலும், நியாயமான விலையை நிர்ணயம் செய்தார். இது அவரது தொழிலை மேலும் வளர்ச்சிக்கு கொண்டு சென்றது. படிப்படியாக டெல்லி மற்றும் லண்டனில் கடைகளைத் திறந்தார்.
ஐஎஸ்ஓ 9001 மற்றும் 14001 சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் நகை நிறுவனம் என்ற பெயரை பெற்றது ஜாய் ஆலுக்காஸ். மார்ச் 16, 2008 அன்று சென்னையில் உள்ள பிரசாந்த் டவரில் 70,000 சதுர அடியில் மிகப்பெரிய நகைக் கடையைத் திறந்தார். இது இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய நகைக்கடையாக அமைந்தது. இதுவே உலகின் மிகப்பெரிய தங்க ஷோரூம் ஆகும். இந்த நிறுவனம் ரூ.4,000 கோடி வருவாயைக் கடந்து, பில்லியன் டாலர் நிறுவனங்களின் பட்டியலில் அதன் பெயரையும் பதிவு செய்தது.
இப்போது மீண்டும் தனது தொழில் மீது மக்களின் கவனத்தை திருப்புவதற்காக, 10 BMW கார் பரிசை அறிவித்தார். அதாவது 2009ஆம் ஆண்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு 10 BMW கார்களை குலுக்கல் முறையில் வழங்கினார். இது மீண்டும் பேசுபொருளாக மாறியது. இதனால் கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்கோ போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது.
இன்று ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.14,513 கோடியாகவும், நிகர லாபம் ரூ.899 கோடியாகவும் உள்ளது. நாடு முழுவதும் 160க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த பிராண்ட் 11 நாடுகளில் உள்ளது. படிப்படியாக பட்டு விற்பனை, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கால் பதித்துள்ளது. இப்போது ஆலுக்காஸ் ஜாய் வர்கீஸ் சொத்து மதிப்பு ரூ.36,500 கோடி. இவர் இந்தியாவின் பணக்கார நகைக்கடைக்காரர். 50 இந்திய பில்லினியர்கள் அடங்கிய போர்ப்ஸ் பட்டியலில் ஜாய் வர்கீஸ் இடம்பிடித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
