இனங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கலாசாரப் பண்புகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் தொடர்பாடல் பிரச்சினைகளைக் குறைத்து பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் தேசிய இளைஞர் படையணி இளைஞர் பயிலிளவல்களுக்கு நடத்தப்பட்ட மூன்று நாள் வடக்கு-_தெற்கு சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அதன் முதல் நாளன்று திவுலப்பிட்டிய பயிற்சி நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதுடன், தெற்கின் அறுஞ்சுவை உணவு மேசை வடக்கிலுள்ள இளைஞர்களின் சுவாரசியமான அம்சமாக இருந்தது.
இரண்டாம் நாளன்று ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார வரலாற்று அருங்காட்சியகம், தாமரை கோபுரம், விஹாரமஹாதேவி பூங்கா மற்றும் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சிறப்பு இடங்களையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பங்குபற்றும் வாய்ப்பும் இளைஞர் பயிலிளவல்களுக்கு கிடைத்தது.
மூன்றாம் நாள் காலையில், அத்தனகல்ல ரஜமஹா விகாரை, கம்பஹா ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்ற இளைஞர் பயிலிளவல்கள் அன்று மாலை திவுலப்பிட்டிய பயிற்சி நிலையத்தில் கிரிக்கெட் மற்றும் கரப்பந்து விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். அன்றைய தினம் இரவில் தீப்பாசறை மற்றும் கலாசார நிகழ்ச்சியும் திவுலப்பிட்டி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க, யூ.எஸ்.பி பிஎஸ்சி ஐஜீ, மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) சட்டத்தரணி நிஷாந்த புஷ்பகுமார, மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், மேல் மாகாண பணிப்பாளர் கேர்ணல் எல்பீ மென்டிஸ் மற்றும் வடமாகாண பணிப்பாளர் கேர்ணல் அமித் லியனகே ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
நிலையப் பொறுப்பதிகாரிகள், நிலைய பணியாளர்கள், பிரதம அலுவலக பணியாளர்கள் மற்றும் இளைஞர் பயிலிளவல்கள் இத்திட்டத்தில் பங்குபற்றினர்.

மேஜர் வா.சுதர்ஸ்சன்
இராணுவ ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகம்
இராணுவத் தலைமையகம்
ஸ்ரீ ஜயவர்தனபுர

