ஆக்ரா: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் ஜூலை 2ஆம் தேதியன்று நடைபெற்ற இந்து சமய நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள்.
மாண்டோர் எண்ணிக்கையை உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங்கும் அம்மாநிலக் காவல்துறையின் தலைமை இயக்குநர் பிரஷாந்த் குமாரும் உறுதி செய்தனர். சம்பவ இடத்துக்கு அவர்கள் இருவரும் ஜூலை 2ஆம் தேதி மாலை நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சமய நிகழ்வு நடைபெற்ற இடத்தில் பக்தர்கள் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டிருக்கக்கூடும் என்றும் இதன் காரணமாக அவர்கள் பதற்றமடைந்து வெளியே ஓடியிருக்கக்கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
அப்போது பலர் கூட்ட நெரிசலில் சிக்கியிருக்கலாம் என்று பேசப்படுகிறது. சமய நிகழ்வில் கலந்துகொள்ள ஏறத்தாழ 100,000 பேர் திரண்டதாகவும் நிகழ்வு முடிந்ததும் அதற்குத் தலைமைத் தாங்கிய துறவியின் காலைத் தொட்டு ஆசிகளைப் பெறப் பலர் விரைந்ததில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கூறினார்.
இந்தச் சம்பவம் விபத்தா அல்லது சதித்திட்டமா என்பதை கண்டறிய உத்தரப் பிரதேச அரசாங்கம் தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்றும் துயரச் சம்பவத்துக்குக் காரணமானோருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


