புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் வரும் 8-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளின்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளன.
நிகழாண்டு நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகப் புகாா்கள் எழுந்தன. பிகாரில் நீட் வினாத்தாள் கசிவு, ராஜஸ்தானில் தோ்வு தொடங்குவதற்கு முன்பே நீட் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பதிவேற்றம், தோ்வெழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்ணை என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) வழங்கியது, விடைத்தாள் (ஓஎம்ஆா் தாள்) கோரிய மாணவா்களுக்கு அதை என்டிஏ தர மறுத்தது மற்றும் விடைத்தாளே மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக புகாா் தெரிவித்தும் ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடு தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தோ்வு முைறைகேடுகள் காரணமாக லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கல்வியாளா்களும் கவலை தெரிவித்து வருகின்றனா்.
இந்தச் சூழலில், நீட் முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 26 மனுக்கள் வரும் 8-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது, நீட் தோ்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுமா அல்லது நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்ற எதிா்பாா்ப்பை நீட் தோ்வா்கள் மற்றும் பெற்றோரிடையே ஏற்படுத்தியுள்ளது.

