புதுடெல்லி: பார்ச்சூன் இந்தியா மற்றும் எஸ்பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் இணைந்து நடத்திய ஆராய்ச்சிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பில்- மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆதரவு அளித்தன.
இந்த அமைப்புகள் நடத்திய ஆய்வின்படி, பார்ச்சூன் இந்தியா 500 பட்டியலில் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 1.6 சதவீதம் மட்டுமே என்று தெரிய வந்துள்ளது.
அதேநேரம், வளர்ந்து வரும்‘அடுத்த (நெக்ஸ்ட்) 500’ நிறுவனங்களின் பட்டியலில் பெண் தலைவர்களின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. 30-40%-க்கும் அதிகமான பெண் ஊழியர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட நடுத்த நிர்வாக பணிக்குள் நுழைவதற்குள் வேலையை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
இதற்கு, திருமணம், குடும்பபிரச்சினைகள் முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றன. அதேபோன்று, மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொண்டு பிரசவத்துக்கு பின்பு பெண்கள் வேலைக்கு மீண்டும் திரும்பி வருவதும் சவாலானதாகவே உள்ளது. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் உரிய கொள்கை மற்றும் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
மகளிருக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதால் பெண்களை நடுத்தர நிர்வாகத்தில் பணியமர்த்த பலநிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. பெரிய நிறுவனங்கள் இந்த சலுகையை அளிக்க விரும்பவில்லை. அதேநேரம், சிறிய நிறுவனங்களால் இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத சூழலில் உள்ளன.
பொதுவாக 40-களின் பிற்பகுதியில் பெற்றோர் அல்லது மாமனார்-மாமியாரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெண்களை வந்துசேர்கிறது. இதனாலும், நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கைகடுமையாக பாதிக்கப்படுவதுடன் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வாரியங்களில் பெண்களின் எண்ணிக்கை 8%லிருந்து 17%-ஆக அதிகரித்திருந்தாலும், பெண் இயக்குநர்களுக்கான தேவை என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. தலைமைப் பதவிக்கு பெண்களின் தேவை அதிகமாக உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெண்கள், குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி எக்ஸ் பதிவில், நிறுவனங்களுக்குள் பாலின சமத்துவமின்மை, நிறுவன கொள்கைகள், தொழில் முன்னேற்ற வாய்ப்புகள், வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் கலாச்சார நெறிகள் ஆகியவை தொழில்துறையில் கவனிக்கப்பட வேண்டிய தடைகளாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
பாலின பன்முகத்தன்மையை அதிகரிப்பதில் முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைக்க வேண்டும். அதேபோன்று, பெண்களை ஊக்குவிக்கும் வகையில் வருமான வரி குறைப்பை அமல் படுத்த வேண்டும்.
நெகிழ்வான வேலை நேரம், இரவு நேர பாதுகாப்பான பயண வசதி உள்ளிட்டவைகளை செயல்படுத்த இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.