சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து விடை பெற்றுள்ளார் விராட் கோலி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்த போட்டியில் ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் விராட் கோலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
அணிக்கு உறுதுணையாக அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் எடுத்தனர். 48 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த விராட் கோலி அதன் பின்னர் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
59 பந்துகளில் 2 சிக்சர் 6 பவுண்டரியுடன் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்த ரன்களை இந்திய அணி சேர்க்க விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்தார்.
தானும் ரன்கள் சேர்த்ததுடன், சிங்கிள்ஸ் எடுத்துக் கொடுத்து எதிர்முனை பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க உதவினார் விராட் கோலி. 3 விக்கெட் விழுந்த பின்னர் அக்சர் படேல் மற்றும் ஷிவம் துபேவுடன் கோலி ஏற்படுத்திய பார்ட்னர்ஷிப்தான் இந்திய அணி சவாலான டார்கெட் வைப்பதற்கு காரணமாக அமைந்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பரிசளிப்பின்போது கேள்விகளுக்கு பதிலளித்த கோலி, இந்த போட்டியுடன் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.
அப்போது பேசிய அவர், டி20-யில் இது என்னுடைய கடைசி உலகக்கோப்பை. நாங்கள் எதை விரும்பினோமோ அதை சாதித்துள்ளோம். இப்போது இல்லையென்றால் எப்போது இல்லை என்ற சூழலை எதிர்கொண்டோம். அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்து விட்டது. இது என்னுடைய 6 ஆவது உலகக்கோப்பை போட்டி. ரோஹித் சர்மாவுக்கு இது 9 ஆவது உலகக்கோப்பை போட்டி. கோப்பையை வெல்ல அவர் தகுதியானவர். என்று கூறினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
