கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி வரை ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதே வழக்கம். ஆனால் இந்த முறை இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சியினரிடம் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து ஆதரவு கோரப்பட்டது. அதற்கு பதிலாக துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வழங்கவேண்டும் என காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கோரினார்.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா அவருடைய எக்ஸ் பக்கத்தில், “கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதும் உயரியதுமான மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும்படி காங்கிரஸ் நிர்பந்தித்திருப்பது தலைகுனிவான விஷயமாகும். இதில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதுதான் மரபு என்றும் அவ்வாறு கொடுத்தால் மட்டுமே சபாநாயகர் நியமனத்துக்கு ஆதரவு தருவோம் எனவும் ராகுல் காந்தி கூறியிருப்பது வெட்கக்கேடான செயல்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது துணை சபாநாயகர்களாகப் பதவி வகித்த அனந்தசயனம் ஐயங்கார் (1952-56), சர்தார்ஹூக்கம் சிங் (1956-62), எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவ் (1962-67) ஆகிய மூவருமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். அந்த காலகட்டத்தில் சபாநாயகர்களாக பதவி வகித்தவர்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இந்திரா காந்தி ஆட்சிக்காலத்திலும் ரகுநாத்கேசவ் கதில்கார் என்கிற காங்கிரஸ் தலைவர்தான் துணை சபாநாயகராக பதவி வகித்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “அவ்வளவு ஏன் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி புரிந்து வரும் மாநிலங்களிலும் ஒரே கட்சியிலிருந்துதான் சபாநாயகரும் துணை சபாநாயகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் பீமன் பானர்ஜி சபாநாயகர் என்றால், அதே கட்சியை சேர்ந்த ஆசிஷ் பானர்ஜி தான் துணைசபாநாயகராக உள்ளார். அதைப்போலவே, தமிழக சட்டசபை சபாநாயகரான மு.அப்பாவு, துணை சபாநாயகரான கு.பிச்சாண்டி இருவருமே திமுக கட்சியை சேர்ந்தவர்களே. இவ்வாறு பலவற்றை கூறிகொண்டே போகலாம்.” எனக் காங்கிரஸை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
