காலநிலை மாற்றம் என்பது இன்றைய உலகம் எதிா்கொள்ளும் மிக முக்கிய சவால்களில் ஒன்றாகும். காலநிலை மாற்றத்தால் பருவ காலங்களின் சமநிலை முற்றாக சிதைந்து வருகிறது.
மழை, வெள்ளம், வறட்சி என்ற முகமூடி அணிந்துக் கொண்டு வரும் இந்த அனா்த்தங்கள் உலகை துவம்சம் செய்து வருகின்றன. இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை இந்த அனா்த்தங்கள் குடித்திருக்கின்றன. கோடானு கோடி சொத்துக்களை இந்த அனா்த்தங்கள் அழித்திருக்கின்றன. உலகில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் இந்த அழிவுகளுக்கு காலநிலை மாற்றம் என்ற இரட்டைச் சொல்லே காரணமாக இருந்து வருகிறது.
நாம் பயன்படுத்தும் புதைபடிவ எரிபொருட்களான (Fossil Fuels) பெற்றோல், டீசல், நிலக்கரி போன்றவற்றின் பாவனை, நாம் எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றத்திற்காக முக்கிய காரணமாகும். புதைபடிவ எரிபொருட்களை எரிக்கும் போது வெளியாகின்ற “கார்பன்“ உமிழ்வு, அதிகளவில் எமது வளிமண்டலத்தை ஆக்கிரமித்து வருகிறது. கார்பன் வாயுவால் உருவான உஷ்ணத்தின் காரணமாக வளிமண்டலத்தில் பயங்கர மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
வளிமண்டலத்தில் கார்பன் சேர்வதன் காரணமாக, புவியின் வெப்பம் அதிகரித்து வளிமண்டலத்தின் சுழற்சிப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுகிறது. இதன் காரணமாக வறட்சி, அதிக மழை, காட்டுத் தீ, வெள்ளம், சூறாவளி, அனல்காற்று , பனிமலை உருகுதல் போன்ற அனா்த்தங்கள் கட்டுக்கடங்காமல் நிகழ்ந்து வருகின்றன.
மனிதனின் சுயநலம் கொண்ட செயற்பாடுகளால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பருவ காலங்களின் சமநிலை சரிந்திருக்கிறது. இதனை சரிசெய்வதற்கு உலகம் இன்று போராடிக் கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தினால் உலகளவில் ஏற்பட்டு வரும் அனா்த்தங்கள், அதற்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற அவசியத்தையும், அவசரத்தையும் உலக நாடுகளுக்கு உணா்த்தியிருக்கிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக பல செயற்திட்டங்களை இந்தியா முன்வைத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் பலவிதமான வேலைத்திட்டங்களை அது செயற்படுத்தி வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) திறனை மேம்படுத்துவதை இந்தியா தனது இலக்காகவும், முக்கிய நடவடிக்கையாகவும் முன்வைத்துள்ளது.
பெற்றோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்கள் மீதான அதன் நம்பகத்தன்மையைக் குறைத்தல் மற்றும் கார்பன் போன்ற பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற வேலைத் திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்தி வருகிறது. புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றீடாக சூரிய ஒளி, காற்று மற்றும் நீா் உள்ளிட்ட சக்திகளைக் கொண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அதிகரிக்க இந்தியா தனது இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதோடு, தொழில்துறை, போக்குவரத்து மற்றும் கட்டிட நிர்மாணத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சூழலுக்கு மாசு ஏற்படாத ஆற்றல் திறனை மேம்படுத்துவதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
சர்வதேச காலநிலை மாற்றம் தொடா்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், உலக அளவில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தீவிர நடவடிக்கையை எடுப்பதற்கும் அந்நாடு உறுதியளித்துள்ளது.
கார்பன் என்ற பசுமைக் குடில் வாயு உமிழ்வின் தீவிரத்தை குறைப்பதாக உறுதியளித்துள்ளதுடன் வனப்பகுதியை அதிகரித்து பாதுகாப்பதன் மூலம் சூழலை பாதுகாப்பதற்கான இலக்குகளையும் இந்தியா நிர்ணயித்துள்ளது.
நன்கு திட்டமிடப்பட்ட உத்திகள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம், காலநிலை மாற்றத்திற்கான தனது பூரண பங்களிப்பை வழங்வதற்கும், அதன் குடிமக்கள் உட்பட உலகளாவிய சமூகத்திற்கு மிகவும் தூய்மையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஏதுவான திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக கணிசமான முதலீடுகளை செய்வதன் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டத்தின் (National Action Plan on Climate Change) ஒரு பகுதியாக 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய சோலார் மிஷன், சூரிய ஆற்றலில் இந்தியாவை உலகளாவிய ரீதியில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.
இந்த தேசிய செயல் திட்டம் 2022 ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் சூரிய சக்தியை அடைய இலக்கு நிர்ணயித்தது. இருப்பினும், இந்தத் துறையில் கணிசமான முன்னேற்றங்கள் மற்றும் முதலீடுகள் காரணமாக, இந்த இலக்கு 100 ஜிகாவாட்டாக உயா்ந்தது.
இந்தியா அதன் காற்றாலை ஆற்றல் திறனில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. உலகளவில் நான்காவது பெரிய காற்றாலை மின் உற்பத்தி செய்யும் நாடாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலுக்கான ஒருங்கிணைந்த முயற்சிகள், 2022 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதற்கான அதன் இலக்கை நோக்கி இந்தியா வெற்றிகரமாக நகா்ந்துக் கொண்டிருகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் என்ற இலக்கை எட்டுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சாதனைகள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை நோக்கி வேகமாக பயணிக்கும் இந்தியாவின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதன் மூலம், இந்தியா தனது கார்பன் தடத்தை குறைப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தன்னை ஒரு முக்கிய பங்காளராக நிலைநிறுத்துகிறது.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒப்பந்தங்கள்
உலகளாவிய ரீதியல் முன்வைக்கப்பட்ட காலநிலை இலக்குகளை அடைவதற்கான முன்னெடுப்புகளில், இந்தியா தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், சர்வதேச காலநிலை பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளது.
காலநிலை மாற்றம் தொடா்பான பாரிஸ் உடன்படிக்கையில், இந்தியா தனது கார்பன் உமிழ்வின் தீவிரத்தை 2005 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 33-35% வரை குறைப்பதாக உறுதியளித்தது. இதேவேளை, கார்பன் உமிழ்வின் தீவிரத்தை 55 வீதமே தாம் குறைக்க முயற்சி செய்வதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்தன. மேலும் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பதில் இந்தியா தனது வலுவான உறுதிப்பாட்டை நிரூபித்து வருகிறது.
காடு வளர்ப்பு மற்றும் பசுமை இந்தியா பணி
கார்பன் என்ற பசுமைக் குடில் வாயு உமிழ்வை குறைக்கவும், காடு வளா்ப்பை அதிகரிக்கவும் இந்தியா விரிவான காடு வளர்ப்பு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தின் (NAPCC) மற்றொரு அங்கமான பசுமை இந்தியா இயக்கம், காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 5 மில்லியன் ஹெக்டேர்களுக்கு அதிகரிப்பதையும், மேலும் 5 மில்லியன் ஹெக்டோ்களில் தற்போதுள்ள காடுகளின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் இந்த முயற்சிகள் கார்பனின் உமிழ்வைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்கிறது. இத்திட்டம் பூமிக்கடியிலான நீர் இருப்பை அதிகரிப்பதோடு, காடு சார்ந்த சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் பன்முக அணுகுமுறையானது, சுற்றுச்சூழலை பொறுப்புணர்வுடன் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.
சூரிய ஒளி, காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் என்பவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கான இலக்குகளை இந்தியா மிகவும் தெளிவாக நிர்ணயித்திருக்கிறது . இந்த முயற்சிகள் புதைபடிவ எரிபொருட்களின் மீதான நம்பிக்கையை இல்லாமல் செய்து, காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்புகளையும் வழங்கி வருகின்றன.

