தி. மோகன்
கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு மலேசியாவின் மிகப்பெரிய நீர் விநியோக நிறுவனமான ஆயர் சிலாங்கூர் சென்டிரியான் பெர்ஹாட் 2.82 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியுள்ளது.


2022ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2.45 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைவிட கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானம் 15.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.


இதன்னயடுத்து சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா பகுதிகளில் உள்ள 9.3 மின்னியல் பயனீட்டாளர்களுக்கு நெடுங்காலத்திற்கு நீர் விநியோகம் மேலாண்மை, சேவையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்யும் என அதன் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரி அபாஸ் அப்துல்லா தெரிவித்தார்.


அதிலும் சேவைத்தரம் தொடர்ந்து உயர்வதை உறுதி செய்யவும் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பொறுப்புடைமை கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஆயர் சிலாங்கூர் 560மில்லியன் ரிங்கிட் முதலீட்டுச் செலவைப் பதிவு செய்துள்ளது.


அதற்கு முந்தைய ஆண்டில் 2.68 பில்லியன் ரிங்கிட் முதலீட்டுச் செலவு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதன் பெரும்பங்கு (1.97 பில்லியன் ரிங்கிட்). முதலாம்கட்ட ராசாவ் நீர் விநியோகத் திட்டத்திற்குச் செலவிடப்பட்டுள்ளது என நேற்று அந்நிறுவனத்தின் 2023 நிதி நிலைமை அறிக்கையை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் அபாஸ் அப்துல்லா விவரித்தார்.


இந்நிலையில் கார்ப்பரெட் சமூகப் பொறுப்புடைமைத் திட்டத்தில் (சிஎஸ்ஆர்) மொத்தமாக 437,737 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது. 1,700க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தனிநபர்கள், சமூக நல இல்லங்களுக்கு இந்த உதவிகள் சென்றடைந்துள்ளன.
அதேபோல் டாருல் ஏசான் நீர் திட்டத்தின் வாயிலாக 285,673 பேர் பயனடைந்துள்ளனர். வசதி குறைந்தவர்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் 30 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் செலவிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


