நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக நாட்டினை ஆள்பவர் தவறான கற்பிதங்களை தெரிவித்து வருகின்றார். நாட்டை ஆள்பவருக்குக் கூட இது குறித்த சரியான புரிதலும், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் தெரியாது. நாட்டை ஆள்பவர்களால் அல்லது மக்களால் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என தீர்மானித்து அறிவிப்புக்களை விடுக்க முடியாது. சர்வதேச நிதி மதிப்பீட்டகங்கள், அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிறுவனங்களே உரிய மதிப்பீடுகளின் பிரகாரம் அறிவிப்பை விடுக்கும்.
இந்நிறுவனங்கள் அறிவியல், இலக்க மற்றும் தரவுகளை மையமாக வைத்து, நிதித்துறையின் பொருளாதார பின்னணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை ஒப்பிட்டாய்ந்து, வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவந்து விட்டதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும்.
உண்மையான தரவுகளை நாட்டுக்கு வழங்க முடியாத ஒரு தலைமைத்துவம் இருக்கும் போது, நாட்டுக்கு பொய் சொல்லி, நாட்டை ஆள்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை குடிமக்களே தீர்மானிக்க வேண்டும். வங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும். உண்மை நிலை தெரிய வேண்டும். தந்திரமான அரசியல் முடிச்சுக்களைக் கையாண்டு தமது இருக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணப்பாட்டில் இருக்காது, இந்தப் பயணத்தின் ஒரே நோக்கம் 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதாக இருக்க வேண்டும். இந்த தூய நோக்கத்துடன் தேசிய நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 266 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், களுத்துறை, ஹொரண, மொரகஹஹேன மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (27) இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரஜைகள்- பங்கேற்பு ஆட்சிமுறை யுகத்தின் தேவைப்பாடாக இன்று எழுந்துள்ளது. நீண்டகாலம் தொட்டு அண்மைக் காலம் வரை, இந்நாட்டின் ஆட்சியாளர்கள் தேசிய நிகழ்ச்சி நிரல்களை தமது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே தயாரித்து வந்தனர். ஆனால் தேசிய நிகழ்ச்சி நிரல் பிரஜைகளின் பங்கேற்புடன் வகுக்கப்பட வேண்டும். குடிமக்களின் அடிமட்டத்திலிருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் நாட்டின் தேசிய கொள்கை வகுப்பாக்கல் செயல்முறையும், தேசிய நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட வேண்டும். பொது மக்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.


