கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாரஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அலிகான் (62 வயது). பொன்னானி பகுதியில் எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ஆம் தேதி தனது நண்பர் முகமது என்பவருடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் செல்வதற்காக எர்ணாகுளம்-டெல்லி இடையே இயக்கப்படும் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். இருவரும் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்ததால், அதற்கான பெட்டியில் ஏறினர்.
அலிகான் மற்றும் அவரது நண்பர் முகமது ஆகிய இவருக்கும் கீழ் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே, ஒரு கீழ் பெர்த்தில் அலிகான் படுத்திருந்தார். மிடில் பெர்த்தில் வேறொருவர் படுத்திருந்தார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, மிடில் பெர்த் திடீரென அறுந்து அலிகான் மீது விழுந்தது. இதில் அவரது கழுத்து எலும்பு உடைந்ததோடு, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் அறுந்து விழுந்த மிடில் பெர்த்தில் படுத்திருந்தவரும் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார்.
இதையடுத்து, வாரங்கல் அருகே உள்ள மருத்துவமனையில் அலிகான் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும், அவரது உடல் நிலை மோசமடைந்ததால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கழுத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, வாரங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலிகானின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சொந்த ஊரான மலப்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அலிகான் மீது விழுந்த இருக்கையை சோதனை செய்ததில், அது நல்ல நிலையில் இருப்பது தெரியவந்ததாகவும், மிடில் பெர்த் அறுந்து விழவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மற்றொரு பயணி சங்கிலியை சரியாக மாட்டாமல் சென்றதால், அது கீழே விழுந்ததாகவும், இதன் காரணமாகவே அலிகான் படுகாயமடைந்து, இறந்திருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
