இலங்கையை உலகின் முன்னணி நாடாக முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள திட்டங்களுக்கு குரோதம், வைராக்கியமின்றி நாட்டில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் .
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட கூட்டத்திலே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எமது நாட்டை உலகின் முன்னணி நாடாக முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள வேலைத் திட்டங்களுக்கு, சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு தொடர்பில் சிறந்த தெளிவும் சர்வதேச நாடுகளுடனான சிறந்த புரிந்துணர்வையும் கொண்டுள்ளார். வீழ்ச்சி யடைந்திருந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் முன்னேற்றுவதற்கு அவரால் முடிந்துள்ளது. அதனை மீண்டும் ஒரு தரப்பினர் சீர்குலைத்தால் இந்த நாடு ஏகாதிபத்தியவாதிகளின் அடிமை நாடாக மாறும்.
இன்று எதிர்க்கட்சியின் சில அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை விற்பதாக தெரிவிக்கின்றனர்.எனினும் நாட்டு மக்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டை அவ்வாறு விற்றால் உலகில் எவரும் அதனை விலைக்கு கொல்வனவு செய்யப் போவதில்லை.
(லோரன்ஸ் செல்வநாயகம்)

