கோலாலம்பூர்:
வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கு வாகன நுழைவு அனுமதி (VEP) முறை கட்டாயமாக்கப்படும்.
“அதில் மாற்றம் இல்லை,” என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 25) தெரிவித்தார்.
நிலம்வழி சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லுபடியாகும் VEP-யை வைத்திருக்க வேண்டும் என்று லோக் மே 28ஆம் தேதி அறிவித்தார்.
வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள் தங்கள் VEP ரேடியோ அதிர்வெண் அடையாள வில்லைகளைப் பொருத்தி, பதிவு செய்து, செயல்படுத்த வேண்டும். மலேசியாவில் வெளிநாட்டு வாகனங்களுக்கான ‘அடையாள அட்டை’யாகச் செயல்படும் VEP இல்லாமல், மலேசியாவுக்குள் நுழைவோருக்கு 2,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
ஏற்கெனவே மலேசியா சென்று அந்தத் தேதிக்குப் பிறகு தொடர்ந்து அங்கிருப்போருக்கும் இத்தண்டனைகள் பொருந்தும் என்றும் கூடப்படுகிறது.
உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் பாலம் ஆகிய இரண்டு நிலவழி எல்லைகளைக் கடக்கும் வாகனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
VEP முறைக்கான பதிவுக் கட்டணம் 10 ரிங்கிட் என்பது குறிப்பிடத்தக்கது.


