
பொதுநலவாய அமைப்பின் Blue charter Project Incubator நிறுவனத்தின் நிதியனுசரணை மூலம் கண்டல் தாவரப் பாதுகாப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
2023ஆம் ஆண்டின் பொதுநலவாய அமைப்பின் Blue charter Project Incubator நிறுவனத்தினால் வழங்கப்படும் நிதியனுசரணை மூலம் கண்டல் தாவரப் பாதுகாப்புக்காக நிதியனுசரணைகளை வழங்குவதற்காக பொதுநலவாய நாடுகளிடமிருந்து கருத்திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக இலங்கை சமர்ப்பித்துள்ள 02 கருத்திட்ட முன்மொழிவுகள் பொதுநலவாய அமைப்பின் Blue charter Project Incubator நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கையில் கண்டல் தாவரங்களின் காபன் படிமத்தைக் கணிப்பிடுதல் தொடர்பாக ஆராய்தல் மற்றும் செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கண்டல் தாவரங்கள் மற்றும் கடற்புல் இடைவலையத்தை வரைபடமாக்கல் கருத்திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்குவதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. குறித்த கருத்திட்டங்களை வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கமைய, குறித்த ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள காணித் துண்டை இலங்கை மின்சார சபைக்கு வழங்கல்
விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப நகரத்தை அண்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான மின்சாரத் தேவை அதிகரித்துள்ளமையால், குறித்த பிரதேசத்தில் உப மின் நிலையத்தை அமைப்பதற்காக ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள மாஹேனவத்த எனும் பெயரிலான காணித்துண்டை வழங்குமாறு, இலங்கை மின்சார சபையால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள 02 ஏக்கர் 03 றூட் 15.41 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை, அரச பிரதான விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கை மின்சார சபைக்கு 30 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உடலியல் நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இராஜகிரியவில் அமைந்துள்ள காணியை 50 வருடகாலத்திற்கு குத்தகை நீடிப்புச் செய்தல்
1999.05.13 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இராஜகிரிய வெலிகட பிரதேசத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 30 பேர்ச்சர்ஸ் காணி, ஆய்வு நடவடிக்கைகளுக்கான கட்டடமொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக சலுகை குத்தகை அடிப்படையில் உடலியல் நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அரச விலைமதிப்பீட்டாளரால் தீர்மானிக்கப்படுகின்ற வருடாந்த வாடகையை அறவிட்டு 50 வருடங்களுக்கு குறித்த காணித்துண்டை உடலியல் நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் நிறுவனத்திற்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக பதில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தல்
பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரிவெனாக் கல்வியை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு தொழில்நுட்ப அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து திட்டமிட்டுள்ளன. அதன்மூலம், பிரிவெனாக்களிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு இலங்கையின் தேசிய பௌத்த மரபுரிமைகளை ஆராய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தக் கூடியதாக அமையும். வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதியும் கல்வி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கந்தர மீன்பிடித் துறைமுகத்தை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் காலப்பகுதியை நீடித்தல் மற்றும் மொத்தச் செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்தல்
கந்தர மீன்பிடி இறங்குதுறையில் மீன்பிடித் துறைமுகமொன்றை நிர்மாணிப்பதற்காக 2019.07.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டம் 2023 டிசம்பர் மாதத்தில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பினும், கொவிட் 19 தொற்று நிலைமையாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இவ்வேலைத்திட்டத்தை எதிர்பார்த்தவாறு பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளது. அதற்கமைய, வேலைத்திட்டத்திற்கமைவான தளத்தை அமைத்தல் உள்ளிட்ட வேலைகளை கருத்திட்டக் காலப்பகுதியான 2023 டிசம்பர் மாதம் தொடக்கம் 2026 டிசம்பர் வரைக்கும் நீடிப்பதற்கும், விலை தளம்பல்களின் அடிப்படையில் மொத்தச் செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்வதற்கும் கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை மறுசீரமைத்தல்
தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள துணைக் கருத்திட்டங்களின் கட்டுமான நடவடிக்கைகளை இராணுவத்திடம் வழங்குவதற்காக 2024.01.08 அன்று இடம்பெற்ற. குறித்த கட்டுமானப் பணிகளை இலங்கை இராணுவத்தினர் மூலம் மேற்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் பொறுப்புக்கள், நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல்
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் முழுமையான வர்த்தக நடவடிக்கைகள் 2021.05.18 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்று (03) வருடங்களுக்கு மின்னுற்பத்தி நிலையத்தின் பொறுப்புக்கள், நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதற்காக இலங்கை மின்சார சபை Vestas Wind Lanka (Pvt) Limited உடன் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தத்தின் ஒப்பந்தகாலம் 2024.05.17 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. போட்டி விலைமனுக் கோரல் முறைமையைக் கடைப்பிடித்து பொருத்தமான சேவை விநியோகத்தரைத் தெரிவு செய்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரட்டை எரிபொருள் கொள்ளளவுடன் கூடிய 200 மெகாவாற்று உள்ளகத்தகன இயந்திரத்தாலான கெரவலப்பிட்டி இயற்கை வாயு நிலையம்
இரட்டை எரிபொருள் கொள்ளளவுடன் கூடிய 200 மெகாவாற்று உள்ளகத்தகன இயந்திரத்தாலான கெரவலப்பிட்டி இயற்கை வாயு நிலையக் கருத்திட்டமானது, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டு 2023- – 2042 காலப்பகுதிக்கான நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்தின் மூலம் அடையாளங் காணப்பட்ட கருத்திட்டமாகும். குறித்த பணிகளுக்காக போட்டி விலைமனுக்கோரல் செயன்முறையைக் கடைப்பிடித்து பொருத்தமான முதலீட்டாளர்களைக் கண்டறிவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை பொலிசுக்கான கட்டுமான வேலைத்திட்டங்களின் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்தல்
இலங்கை பொலிசுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில் பல கட்டுமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2020ஆம் ஆண்டில் கொவிட் 19 தொற்று நிலைமையாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளாலும் 2021-–2023 வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த கீழ்க்காணும் கருத்திட்டங்கள் எதிர்பார்த்தவாறு பூர்த்தி செய்வதற்கு இயலாமல் போயுள்ளது. குறித்த வேலைத்திட்டங்களில் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவற்றுக்கு முழுமையான செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்வதற்கும், கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்யும் காலத்தை 2024 – 2027 வரை நீடிப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
2022 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ள தேசிய புத்தாக்க முகவராண்மை நிறுவனத்தால் சமூக, விஞ்ஞான, தொழிநுட்ப, பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் சேவைகள் என்பனவற்றின் புத்தாக்கம் பற்றிய தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கிடையே ஏதேனும் வித்தியாசம் ஏற்படும் பட்சத்தில் சிங்கள மொழியே மூலமாக அமையும்.)

