உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் வலுவான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு எட்டு அணிகள் தகுதி பெற்றன. இவை குரூப் 1 மற்றும் குரூப் 2 என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் 1-லும், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் குரூப் 2 பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
குரூப் 1 பிரிவில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குர்பாஸ் 60 ரன்னிலும், இப்ராஹிம் 51 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப இலக்கத்தில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இதையஎடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விளையாடத் தொடங்கினர்.
இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சுக்கு முன்னால் ஆஸ்திரேலிய அணி வீரர்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 59 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களும் எடுத்தனர். ஸ்டாய்னிஸ் 11 ரன்களில் ஆட்டம் இழக்க, மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் சற்று குறைந்துள்ளன.
இதையும் படிங்க – ரன் குவிக்க திணறும் விராட் கோலி… இந்திய அணியின் பேட்டிங் கோச் அதிருப்தி
நாளை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஆஸ்திரேலியாவை இந்தியா வென்று, ஆப்கானிஸ்தான் அணி அடுத்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தினால் அரை இறுதிக்கு சென்று விடும். இந்த வரலாற்று சாதனையை அந்த அணி ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)