தன்னுடைய சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி அதில் வெற்றியடைந்த பெண்மணியான பூனம் குப்தாவின் வாழ்க்கை கதை இந்திய இளைஞர்கள் பலருக்கும் நிச்சயம் உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும். காகிதங்களை மறுசுழற்சி செய்யும் தொழிலை தொடங்கிய பூனம் குப்தா, அதை இன்று ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியுள்ளார்.
வெளிநாட்டு வாழ் இந்தியரான பூனம் குப்தா டெல்லியில் பிறந்தார். டெல்லி பப்ளிக் பள்ளி மற்றும் லேடி இர்வின் பள்ளியில் பயின்ற பூனம், தனது பட்டப்படிப்பை டெல்லி பல்கலைகழகத்தில் நிறைவு செய்தார். அதன்பிறகு டெல்லியிலுள்ள FORE ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்டில் சேர்ந்து எம்பிஏ-வில் சர்வதேச தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் துறையை தேர்ந்தெடுத்து படித்தார். அதுமட்டுமின்றி ஹாலந்து நாட்டிலுள்ள மாஸ்ட்ரிக்ட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்டிலு எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
2002-ம் ஆண்டு பூனம் குப்தாவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தனது கணவர் புனீ குப்தாவோடு இணைந்து ஸ்காட்லாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு பூனம் குப்தா எதிர்பார்த்த வேலைகள் எதிலும் அவரால் சேர முடியவில்லை. இதன் காரணமாக சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார். 2003-ம் ஆண்டில் PG Paper Company என்ற பெயரில் தனது நிறுவனத்தை ஸ்காட்லாந்தில் உள்ள கில்மாகாம் என்ற பகுதியில் தொடங்கினார் பூனம் குப்தா. இந்த நிறுவனத்தை தொடங்க பூனம் குப்தாவிற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்தது ஸ்காட்லாந்து அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் தொடங்கிய ஆறு மாதங்கள் கழித்து பூனமின் கணவரும் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். இதற்காக அவருக்கு ஆண்டு வருமானமாக ரூ.1.5 கோடி கொடுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மற்றவர்கள் தூக்கி எறிந்த, குப்பையில் வீசப்பட்ட பொருட்களை எடுத்து அதை மறுபடியும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றி விற்பனை செய்வதையே இவர்கள் நிறுவனம் செய்து வந்தது. தற்போது PG Paper நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 53 நாடுகளிலிருந்து பொருட்களை ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்து வருகிறது. இங்கிலாந்தின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் காகித நிறுவனங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.
அதற்கு முக்கிய காரணம் பூனம் குப்தா. இவருடைய கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும், விடாமுயற்சியும் தான் நிறுவனத்தை இந்தளவிற்கு உயர்த்தியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரூ.1,000 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டி வரும் இந்த நிறுவனத்தில் 350-க்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்று ஏழு நாடுகளில் பல்வேறு அலுவலகங்களை கொண்டுள்ள ஒன்பது நிறுவனங்களை சொந்தமாக நடத்தி வருகிறார் பூனம் குப்தா.
.
&w=750&resize=750,375&ssl=1)
