இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையில் வளர்ந்துவரும் இருபக்க நட்புறவை வலுப்படுத்துவதற்கான புதிய முன்முயற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ- மத்தியத்தரைக்கடல் முன்முயற்சி என்ற பெயர் கொண்ட இத்திட்டம் இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்ற ‘இந்திய மன்றம் 2024’ இன் ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையில் வளர்ந்துவரும் கூட்டாண்மையை ஆய்வு செய்தல், ஒத்துழைப்பு நல்குதல் மற்றும் மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய வர்த்தக சம்மேளனத்தின் இத்தாலிக்கான பிரதான பிரதிநிதி வாஸ் செனொய் ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில் பல தரப்பட்ட பேச்சாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அமேயா பிரபு, ‘உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு இத்தாலி-இந்திய உறவு மிகவும் முக்கியமானது. அத்தோடு வர்த்தகமும் வியாபார நடவடிக்கைகளும் நம்பிக்கையுடன் முன்னெடுக்கப்படுவதும் அத்தியாவசியமானது என்று கூறியுளளார்.
இந்திய – இத்தாலிய பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவரும் முன்னாள் இத்தாலிய அமைச்சருமான செனட்டர் கியுலியோ டெர்சி டி சான்ட்’அகாடா தலைமை தாங்கும் இம்முன்முயற்சியின் மாநாட்டில், பாராளுமன்ற நட்புறவு குழுவின் பிரதிநிதிகள், இத்தாலி நிறுவனங்கள், இந்திய வர்த்தக சம்மேளனத்தின் 30 நிறுவனங்களது முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

