சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலியின் சாதனையை, சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை நடந்த சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்கள் அடித்து, இந்தியாவின் ரன் குவிப்புக்கு உதவினார். 182 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 10 வீரர்களும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது ஒரு சாதனையாக உருவெடுத்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில், ஒரு அணியின் வீரர்கள் அனைவரும் கேட்ச் கொடுத்து அவுட்டானது இது இரண்டாவது முறை. முன்னதாக, 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக போட்டியில் இந்த சிறப்பை முதன்முதலில் எட்டியது ஆப்கானிஸ்தான் அணி.
இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்களித்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதில்தான் அவர் விராட் கோலியுடன் இணைந்துள்ளார். ஆம்! சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை அதாவது 15 முறை ஆட்டநாயகன் விருது பெற்று, விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். அந்த சாதனையை தற்போது சூர்யகுமார் யாதவும் சமன் செய்துள்ளார். இதுவரை 64 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 45.06 சராசரி, 168.51 ஸ்ட்ரைக் ரேட் உடன் 2,253 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 19 அரை சதங்களும் அடங்கும்.
இதையும் படிக்க:
ஒரே பந்தில் ஹிட் விக்கெட், ரன் அவுட் – ஆனாலும் அவுட் ஆகாத பாகிஸ்தான் வீரர்! காரணம் என்ன தெரியுமா?
இவரைத் தொடர்ந்து, விரந்தீப் சிங் (மலேசியா), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), முகமது நபி (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் தலா 14 முறை ஆட்டநாயகன் விருதுபெற்று இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர். இந்த பட்டியலில் 13 ஆட்ட நாயகன் விருதுகளுடன் ரோகித் சர்மா 3வது இடத்தில் இருக்கிறார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)