சென்னை: நடிகராக இருந்து தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை உருவாக்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் முழுமையாக எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதற்காக திட்டத்தில் இருந்த அவரது கடைசி படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல நாயகர்களை உருவாக்கி வெற்றிகரமாக இயக்குனராக வலம் வந்த எஸ்ஏ சந்திரசேகரின் மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை நடிகர் விஜய் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும் நாளைய தீர்ப்பு மூலம் நாயகனாக அவதாரம் எடுத்த அவர் முதல் படத்தின் போதே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.
குறிப்பாக உருவகேலி, படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் பெண்களை முகம் சுளிக்க வைத்தது. தொடர்ந்து மாண்புமிகு மாணவன் போன்ற பாணியிலான படங்கள் விஜய்யை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்றாலும் ஒரு முழுமையான நாயகனாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தொடர்ந்து பூவே உனக்காக உள்ளிட்ட ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து காதல் படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் திருமலை படத்தின் மூலம் ஆக்சன் ரூட்டுக்கு மாறினார். அப்போதிருந்து இப்போது வரை விஜயின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாயகர்கள் பட்டியலில் விஜய் இருக்கிறார். கோட் படத்திற்கு அவர் இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இப்படியாக திரை துறையில் ஜெயித்த விஜய் அரசியல் ஆர்வத்தையும் அவ்வப்போது வெளிக்காட்டி வந்திருக்கிறார். தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தவர் தொடர்ந்து அரசியல் ஆசை காரணமாக அதை மக்கள் இயக்கமாக மாற்றினார். தற்போது அந்த இயக்கமே தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியாக பரிணமித்து இருக்கிறது. 2026 தேர்தல் தான் தனது டார்கெட் என அறிக்கையும் வெளியிட்டார் விஜய். மேலும் 2026 தேர்தலைக் குறிவைத்து களமிறங்குவதால் இனி சினிமா திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஷூட்டிங்கில் இருந்த தி கோட் படம் அதற்குப் பிறகு ஒப்புக்கொண்ட ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் களம் இறங்க போகிறேன் என அறிவித்திருந்தார்.
கோட் படப்பிடிப்பில் கேரளா தமிழகத்தில் ரசிகர்களை சந்தித்தது ட்விட்டரில் வாழ்த்து சொல்வது என விஜய் சாதாரண அரசியல்வாதியாக இருக்கும் நிலையில் பல விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. ட்விட்டர் வாழ்த்து சொல்ல பலர் இருக்கும் போது விஜய் எதற்கு என சமூக வலைதளங்களில் விமர்சனம் இருந்தது.
விக்கிரவாண்டி தேர்தலையும் விஜய் தரப்பு புறக்கணித்து இருப்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் அடுத்து என்ன முடிவெடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்கள் தலையில் இடி விழுவதைப் போல ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. தற்போது கோட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை பட நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான பிரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றன.
இந்த நிலையில் கடைசி படம் கைவிடப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஆந்திராவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை இயக்குவதாக தகவல்கள் உலாவின. அது மட்டுமில்லாமல் அட்லி, கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத் என பல இயக்குனர்களின் பெயர்களும் விஜயின் கடைசி பட இயக்குனர் பட்டியலில் இருந்தது. கடைசி படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இரண்டு நிலையில் அப்டேட் வெளியாகமலேயே அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் உலாவுகின்றன. இதுகுறித்து விசாரித்த போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக இரண்டு வருடங்கள் இருக்கிறது.
அதற்குள்ளாக மாநாடு நடத்தி முடிக்க வேண்டும் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் , மக்களையும் சந்திக்க வேண்டும், மக்களிடம் சின்னம் கொடி உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்க வேண்டும், நிர்வாகிகளுடன் ஆலோசனை சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன என்பது குறித்து ஆராய வேண்டும் இப்படி பல சிக்கல்கள் விஜய்க்கு முன் இருக்கிறது.
எப்படியும் ஒரு படம் ஆரம்ப முதல் வெளியாவது வரை ஒரு வருடமாவது எடுத்துக் கொள்ளும். அப்படி பார்க்கையில் 2025ல் சினிமாவில் கால் பதித்தால் அரசியலில் சிக்கலை சந்திக்க வேண்டும் என்பதாலேயே கடைசி படத்தை கைவிட்டு விடலாம் என விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் தரப்பில் விசாரித்த போது எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் யூகங்களுக்கு இடம் அளிக்க வேண்டாம் எனக் கூறியிருக்கின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


