எமது வீரர்களின் தவறு மற்றும் மோசமான ஆட்டம் காரணமாக டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது என்று நாடு திரும்பிய இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றுடன் வெளியேறிய இலங்கை அணி நேற்றுக் காலை இலங்கை திரும்பியது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஹசரங்க,
‘வீரர்கள் என்ற வகையில் நாம் செய்த தவறுகள் பற்றி எமக்குத் தெரியும். நாம் துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்களாக நன்றாக செயற்படாததால் இவ்வாறு தோல்வியை சந்தித்தோம்’ என்றார்.
இலங்கை அணி வழக்கமாக விமாநிலையத்தின் சாதாரண பயணிகள் பாதை வழியாக வெளியேறி செல்கின்றபோதும், அதற்கு பதில் நேற்று பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் ‘சில்க் ரூட்’ வழியாக விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.
இந்த ‘சில்க் ரூட்’ வசதியை பெறுவதற்கு ஒருவருக்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுவதோடு, இலங்கை கிரிக்கெட் அணி அந்தப் பணத்தை செலுத்தி இந்த வசதியை பெற்றதாக விமான நிலைய பொறுப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

