இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது தொடர்பான நேர்காணலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது தீவிரமாக நடத்தி வருகிறது.
அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் தேர்வு செய்யப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு போட்டியாக முன்னாள் வீரர் ஒருவர் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார்
அவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் நிறைவு பெற்றது. இருப்பினும், டி20 உலகக்கோப்பையை கவனத்தில் கொண்டு டிராவிட்டின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இதே பொறுப்பில் தான் நீடிக்க விரும்பவில்லை என்று டிராவிட் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதற்கிடையே தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதுகுறித்த நேர்காணல் தற்போது நடைபெற்று வருகிறது. கவுதம் காம்பீர்தான் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேர்காணலின்போது கவுதம் காம்பீருக்கு சவால் கொடுக்கும் வகையில், முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமன் நேர்காணலை எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது.
மதியம் 12 மணியளவில் கவுதம் காம்பீருடன் பிசிசிஐ நிர்வாகிகள் நேர்காணல் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. நாளையும், நேர்காணல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டபிள்யூ.வி. ராமன் பங்கேற்கலாம். இதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர் ஜூலை 1 ஆம் தேதி முதல் 2027 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பொறுப்பில் இருப்பார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
