ஹஜ் பெருநாளை விமர்சையாகவும் குதூகலமாகவும் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம், நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் அத்தினத்தை கொண்டாடி மகிழும்போது உன்னதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பெருநாளுக்காக குளிப்பதும் நறுமணம் பூசிக் கொள்வதும், இருக்கின்ற ஆடைகளில் அழகான ஆடைகளை அணிந்து கொள்வதும் பெருநாள் தினத்தில் நாம் கடை பிடிக்க வேண்டிய ஸுன்னாக்களாகும்.
நபி (ஸல்) அவர்களின் பேரர் ஹஸன் (ரழி) அவர்கள், ‘பெருநாள் தினத்திலே எம்மிடம் இருக்கக்கூடிய ஆடைகளுள் மிகச் சிறந்த ஆடையை நாம் அணிய வேண்டும். எம்மிடமிருக்கும் நறுமணங்களுள் மிக உயர்ந்த நறுமணத்தைப் பூசிக்கொள்ள வேண்டும். (ஆதாரம்: அல்ஹாகிம்)
மேலும் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காகச் செல்கின்றபோது ஒரு பாதையால் செல்வார்கள். திரும்புகின்றபோது மற்றறொரு பாதையால் திரும்புவார்கள்.’ (ஆதாரம்: ஸஹீஹு முஸ்லிம், அஹ்மத், திர்மிதி)
பெருநாள் தொழுகை நடைபெறும் இடத்துக்குச் செல்வதற்கு ஒரு பாதை மாத்திரமே இருக்கிறது அல்லது வேறு பாதையினால் திரும்புவதில் ஏதும் சிரமங்கள் இருக்கின்றன என அறிந்தால் சென்ற பாதையினூடாகவே திரும்பி வருவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆயுளில் மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடிய இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இப்படியான ஸுன்னத்துக்களை முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பது சிறந்தது.
மேலும் ஹஜ்ஜுப் பெருநாளுக்குரிய தொழுகையை முடியுமான வரை நேரகாலத்தோடு தொழுவது மிக முக்கியமான ஒரு ஸுன்னாவாகும். ‘இரண்டு ஈட்டியின் அளவு உயரத்திற்கு சூரியன் உயரும்போது ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையையும் சூரியன் ஓர் ஈட்டியின் அளவுக்கு உயரும்போது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றுவார்கள்’ (நபிமொழி).
‘ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகையை நேரகாலத்தோடு நிறைவேற்றுவது நபிவழி’ என இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதேநேரம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் சிலர் பெருநாள் குத்பா பிரசங்கத்தை கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெருநாள் தொழுகை ஒரு ஸுன்னா முக்கதாவாக இருப்பது போலவே பெருநாள் குத்பாவைக் கேட்பதும் ஒரு ஸுன்னா முஅக்கதா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்களின் இயல்பை, சுபாவத்தை அறிந்து வைத்துள்ள இஸ்லாம், பெருநாள் தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஹலாலான ஆகுமான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கும் அனுமதி அளித்துள்ளது. ‘பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் பார்த்திருக்க அபீசீனியா அடிமைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். நான் அந்தக் காட்சியை நபியவர்களின் புஜத்துக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அந்தக் காட்சியைக் கண்டு களிக்க வேண்டுமென்பதற்காக நபியவர்கள் குனிந்து தனது முதுகைப் பணித்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அந்த அபிசீனியா அடிமைகளுடைய ஆடல், பாடல்களைக் கேட்டு ரசித்தேன் மனநிறைவு அடைந்ததைத் தொடர்ந்து நான் வீட்டுக்குள்ளே சென்று விட்டேன் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹு முஸ்லிம்)
இந்த வகையில் எமது குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இப்பெருநாள் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் ஆகுமான, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களையும், கலை நிகழ்ச்சிகளையும ஷரீஆ வரம்புகளைப் பேணி ஒழுங்கு செய்ய வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது. ஆனாலும் பெருநாள் தினத்தில் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் சொல்ல வேண்டும். அதுவும் முக்கிய ஸுன்னாக்களில் ஒன்று. ஈதுல் அழ்ஹாவைப் பொறுத்தவரை பெருநாள் தினம் தொடக்கம் அய்யாமுத் திஷ்ரீக்குடைய நாட்கள் முடியும் வரை திக்பீர் சொல்வது ஸுன்னா அந்த வகையில் தக்பீரை அதிகமதிகம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ‘ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்ந்தும் திக்ர் கூறியும் அழகுபடுத்துங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பெருநாள் தினத்தில் நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு ஸுன்னா தான் வாழ்த்துத் தெரிவிப்பதாகும். பெருநாள் தினத்தில் நபித் தோழர்கள் சந்தித்துக் கொண்டால் ‘தகப் பலல்லாஹு மின்னா வமின்கும்’ (அல்லாஹ் உங்களையும் என்னையும் பொருந்திக் கொள்வானாக) என்று வாழ்த்துக் கூறியவர்களாக முஸாபஹா, முஆனகா செய்துகொள்வார்கள். இது வெறுமனே ஒரு வாழ்த்து மட்டுமல்ல. ஓர் உயர்ந்த பிரார்த்தனையும்கூட.
ஈதுல் அழ்ஹாவைப் பொறுத்தவரை உழ்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா (ஸுன்னா முக்கதா) என்ற வகையில் இந்தக் கடமையையும் நாம் நிறைவேற்ற வேண்டும். உழ்ஹிய்யா கொடுப்பதினூடாக இரண்டு நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஒன்று, இப்றாஹீம் (அலை) அவர்களுடைய தியாகத்தை, அர்ப்பணத்தை நினைவுகூர்தல். மற்றையது பெருநாள் தினத்தில் ஏழைகள், தேவையுடையவர்களுக்கு மாமிசத்தைக் கொடுத்து அவர்களுடைய தேவையை நிறைவேற்றுதல். இக்கிரியை நிறைவேற்றும் போது பிற சமயத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பது எமது கடமை. எனவே, நாம் குர்பான் கொடுக்கின்றபோது அவர்களுடைய மத உணர்வுகள் புண்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. பெருநாள் தினத்தில் எமது சகோதர சகோதரிகள், இனபந்துக்கள், அன்பர்களை, நண்பர்கள், உற்றார் உறவினரை அரவணைப்பது. ஆதரிப்பது, அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது அவர்களுடனான உறவைப் பலப்படுத்திக் கொள்வது, பகைமை இருந்தால் அதனை அல்லாஹ்வுக்காக மன்னித்து உறவைப் புதுப்பித்துக் கொள்வது… போன்ற உன்னத கூலிகளைப் பெற்றுத் தரக்கூடிய அம்சங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, எமது பெற்றோர், சகோதர, சகோதரிகள் உட்பட இரத்த உறவினர்களுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்ள ஈதுல் அழ்ஹா பெருநாள் உதவும்.
‘குடும்ப உறவை முறித்துக் கொண்டவன் சுவனம் நுழைய மாட்டான்’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். ‘யார் தனது வாழ்வாதாரம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும் ஆயுள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறாரோ அவர் தனது இனபந்துக்களுடன் இணைந்து வாழட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு தடவை இப்னு உமர் (ரழி) அவர்கள், ‘தனது இரட்சகனை அஞ்சி இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும் செல்வம் பெருகும் வரை அவரது குடும்பத்தினர் நேசிப்பர்.’ (ஆதாரம்: அல் அதபுல்முப்ரத்)
அத்தோடு அண்டை அயலவர்களுக்கு இத்தினத்தில் அதிகம் உபகாரம் செய்யவும் தவறலாகாது. அவர்கள் முஸ்லிம்களாகவோ முஸ்லிமல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர்களை அனுசரிக்கின்ற, அரவணைக்கின்ற ஒரு நாளாக பெருநாள் தினத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களைச் சந்தித்தல், வாழ்த்துத் தெரிவித்தல், அவர்களுக்கு உணவுப் பண்டங்களைக் கொடுத்தனுப்புதல் போன்ற அவர்களை மகிழ்வூட்டுகின்ற சந்தர்ப்பமாகவும் இந்தப் பெருநாள் தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு ஏற்ப பெருநாளை அமைத்துக் கொள்வோம். ஈத் முபாரக்
மௌலவி எம்.யூ ,எம் வாலிஹ் (அல் அஸ்ஹரி) வெலிகம

