உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மழை மற்றும் ஈரப்பதம் நிறைந்த ஆடுகளம் காரணமாக இன்று நடைபெறவிருந்த இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதேபோன்று 4 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளை பெற்றுள்ள அமெரிக்காவும் சூப்பர் 8க்கு சென்றுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் கனடா அணியை இந்தியா இன்று புளோரிடாவில் உள் லாடர்ஹில் மைதானத்தில் மோதுவதாக இருந்தது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட இருந்த கடைசி போட்டி இதுவாகும்.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்கு முன்னரே மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டது. ஆட்டத்தின் நடுவர்கள் அவ்வப்போது களத்திற்கு வந்து களத்தின் தன்மையை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். மழை தொடர்ந்து பெய்வதாலும், ஆடுகளம் ஈரத் தன்மையுடன் காணப்படுவதாலும் இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக தற்போது நடுவர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் லீக் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று, இந்த போட்டி ரத்தானதால் கிடைக்கப் பெற்ற 1 புள்ளியுடன் மொததம் 7 புள்ளிகளைப் பெற்று ஏ குரூப்பில் முதலிடத்தில் உள்ளது.
வரும் 20 ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ள சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
