வீட்டின் மொட்டை மாடியில் சோலார் மின் உற்பத்திக்கான தகடுகள் பொருத்தினால், மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதோடு, மானியமும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை எப்படி வாங்குவது?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ரூ.75,000 கோடி முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வகையில், பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மின் கட்டணத்தின் சுமையை பெருமளவு குறையும். அத்துடன், பயன்படுத்திய மின்சாரம் போக, எஞ்சியதை விற்பனை செய்தும் பலனடையலாம். பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு மானியமும் வழங்குகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பினால், வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். முதலில் இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், சோலார் பேனல்களை நிறுவி, அதை நமது மின் இணைப்புடன் சேர்க்க வேண்டும். இந்த வகையில், ஒரு கிலோவாட் சோலார் பேனல் அமைக்க ரூ.90 ஆயிரம் செலவாகும். 2 கிலோவாட் சோலார் பேனல் அமைக்க ரூ.1.5 லட்சம் செலவாகும். 3 கிலோவாட் சோலார் பேனலுக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும்.
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ், 1 கிலோவாட் சோலார் பேனல் அமைத்தால், ரூ.18,000 மானியம் கிடைக்கும். 2 கிலோவாட் சோலார் பேனல் அமைத்தால், ரூ.30,000 மானியம் கிடைக்கும். 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் எவ்வளவு அமைத்தாலும், அதிகபட்சமாக ரூ.78,000 மானியம் வழங்கப்படும். அரசு வழங்கும் மானியத் தொகை நேரடியாக, பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தற்போது விற்பனையாகும் சோலார் பேனல்கள் 24 மணி நேரமும் வீட்டிற்கு மின்சாரத்தை வழங்க முடியும். இந்த மின்சாரத்தை பயன்படுத்தி, வாகனங்களையும் சார்ஜ் செய்யலாம். இதை பொருத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30,000 வரை மின் கட்டணத்தில் மிச்சப்படுத்தலாம். அத்துடன், மாதந்தோறும் இலவச மின்சாரமும் கிடைக்கும்.
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ் பலனடைய, விண்ணப்பிப்பவர்கள் இந்தியராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தாரர்களின் குடும்ப ஆண்டு வருமான ரூ.1.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, வசிப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மின்சார பில், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தகம், மொபைல் எண் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
இதையும் படிங்க:
ஜெகன்மோகன் ரெட்டி வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு இடிப்பு… ஆந்திராவில் பரபரப்பு!
முதலில் https://www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, ரூஃப் டாப் சோலார் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது புதிதாக தோன்றும் ஒரு பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். பின்னர், கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். வெற்றிகரமாக விண்ணப்பித்த பிறகு, ஆவணங்கள் அனைத்தும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, மானியப் பலன்கள் வழங்கப்படும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)