புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த தனலக்ஷ்மி வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.3 கோடியாகப் பதிவாகியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023 டிசம்பரில் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.3 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.22 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.343 கோடியாக உயா்ந்துள்ளது.
இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் ரூ.312 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் ரூ.276 கோடியிலிருந்து ரூ.308 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2022 டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி 5.83 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி 4.81 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நிகர வாராக் கடன் விகிதம் 1.82 சதவீதத்திலிருந்து 1.27 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.