சென்னை அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கி இருக்கக் கூடாது என்றும், குஜராத் அணியின் பவுலருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான இர்ஃபான் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேறிவிடும். அதே நேரம் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ளும்.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதை அடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அதிரடியாக சதம் அடித்து அணியின் ஸ்கோரை எகிற வைத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலமாக குஜராத் அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டனும் 55 பந்துகளில் 104 ரன்கள் குவித்த சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான இர்ஃபான் பதான் கூறியதாவது-
என்னைப் பொறுத்தளவில் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கி இருக்கக் கூடாது. ஏனென்றால் அஹமதாபாத் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக உள்ள ஒரு தட்டையான மைதானம் ஆகும். எனவே பேட்டிங் செய்வது அங்கு எளிதாக இருக்கும். இரண்டாவது பேட்டிங் செய்த சென்னை அணி 200 ரன்களை நெருங்கிவிட்டது.
குஜராத் அணியின் பவுலர்களில் மோகித் சர்மா மட்டும்தான் சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். சென்னை அணியில் டேரில் மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே ஆகிய 3 விக்கெட்டுகளை மோகித் சர்மா கைப்பற்றினார்.
குறிப்பாக மொயின் அலி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் நன்றாக செட்டில் ஆகியிருந்தனர். அவர்களில் ஒருவர் களத்தில் நின்றிருந்தால் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும். இதன் அடிப்படையில் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது மோகித் சர்மாவுக்கு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்று தெரிவித்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசிய மோகித் சர்மா 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான டேரில் மிட்செல், மொயின் அலி மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்
.
&w=750&resize=750,375&ssl=1)
