கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, தனது வீட்டிற்கு உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவரது தாயார் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் 81 வயதான எடியூரப்பா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, புகார் அளித்திருந்த சிறுமியின் தாய் மர்மான முறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், வழக்கை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எடியூரப்பாவிற்கு சம்மன் அனுப்பியது. ஆனால், டெல்லியில் உள்ள எடியூரப்பா சிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவரை கைது செய்ய அனுமதி கோரி, சிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், அறைக்குள் நடந்த சம்பவங்களை வெளியில் கூற வேண்டாம் எனவும், தேவையான உதவிகளை செய்வதாகவும் எடியூரப்பா கூறியதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் எடியூரப்பா நான்கு முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். பாஜக தலைமையின் அழுத்தம் காரணமாக 2021 ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார்.
தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடக மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் நிலையில் அரசியல் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)