ஃபிஃபா உலகக் கோப்பை 2026ல் இடம்பெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் கத்தார் அணி இந்தியாவை ஏமாற்றி கோல் அடித்து வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்தியா வாய்ப்பை இழந்துள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது கடைசி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தார் அணியை எதிர்கொண்டது.
போட்டியின் 37வது நிமிடத்தில் லல்லியன் சுவாலா சாங்டே முதல் கோலை அடித்து, இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் நடைபெற்றது. அதாவது, கோல் கீப்பர் பந்தை தடுத்தபோது, அது கோட்டுக்கு வெளியே சென்றுவிட்டது. ஆனால், அந்த பந்தை கத்தார் வீரர் அல் ஹசன் தள்ளிவிட, மற்றொரு வீரரான அய்மென் கோல் அடித்தார். அதன் பின்னர் 85 நிமிடத்தில், அகமது அல்ரவி மற்றொரு கோலை அடித்ததால், 2-1 என்ற கணக்கில் கத்தார் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கால்பந்து விதியின் படி, ஒரு பந்து கோட்டுக்கு வெளியே சென்றுவிட்டால், அந்த பந்தை நடுவர் தான் எடுத்து, வீரர்களுக்கு புதிதாக வழங்க வேண்டும். ஆனால், கத்தார் அணி வீரர்கள் முதல் கோலின்போது திட்டமிட்டு இந்திய அணியை ஏமாற்றிவிட்டனர். கத்தார் வீரர்கள்தான் இப்படி இருந்தார்கள் என்றால், போட்டியின் நடுவரும் கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டார். அத்துடன், ரிவ்யூ பார்க்கும் VAR முறையை மூன்றாவது நடுவரும் பயன்படுத்தவில்லை.
இதனால், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இதையடுத்து, தவறு நடந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டு, இந்தியாவுக்கு நியாயம் வழங்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அத்துடன், இந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய கொள்ளை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
