அரசியல் பின்னடைவுகள், தோல்வி, சிறை என பல்வேறு இன்னல்களைத் தாண்டி மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளார் சந்திர பாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவின் முழுப்பெயர் நர சந்திரபாபு நாயுடு. பால் பண்ணைகளுக்குப் பேர் போன ஆந்திர மாநிலம் சித்தூரில், 1950ம் ஆண்டு கார்ஜூர நாயுடுவுக்கும் அமனம்மாவுக்கும்
பிறந்தவர்.
சிறுவயதில் இருந்தே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டிய சந்திரபாபு நாயுடு, தனது பிஎச்டி ஆய்வை கூட அரசியலை சார்ந்தே மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு அரசியல் தலைவர்களுடன் ஏற்பட்ட நேரடித் தொடர்பால், முழுநேர அரசியல்வாதியாக மாறினார். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர், 1978 ஆம் ஆண்டு, சந்திரகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். அப்போது ஜலகம் வெங்கல் ராவின் அமைச்சரவையில் இடம் பிடித்த சந்திரபாபு, இளம் அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே, 1980ம் ஆண்டு என்.டி. ராமராவின் இரண்டாவது மகளான புவனேஸ்வரியை மணந்தார். காங்கிரஸ் கட்சியில் நீடித்த அவருக்கு 1983 சட்டப்பேரவை தேர்தல் தோல்வியைத் தந்தது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து வெளியேறிய அவர், என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
பின்னர் 1989ம் ஆண்டு குப்பம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இதற்கிடையே, என்.டி.ராமராவால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பங்களை சாதகமாக்கிக் கொண்ட நாயுடு, முதலமைச்சராக இருந்த தனது மாமனார் என்.டி.ராமராவுக்கு எதிராக புரட்சி செய்து, 1995- ஆம் ஆண்டில் ஆந்திராவின் அரியணையில் ஏறினார். அடுத்து வந்த தேர்தலிலும் அபார வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். முதலமைச்சராக பதிவி வகித்த 9 ஆண்டுகளில், ஐதராபாத்தை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றினார். உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஐதாராபத்தில் முதலீடுகளை குவித்தன. இதன் காரணமாக சிஇஓ சிம் என்றும் அழைக்கப்பட்டார்.
இதற்கிடையே, 2003 ஆம் ஆண்டு திருப்பதி அருகே குண்டுவெடிப்பில் சிக்கி நாயுடு படுகாயமடைந்தார். இதனால் ஏற்பட்ட அனுதாப அலையை சாதகமாக்கிகொள்ள நினைத்த அவர், சட்டமன்றத்தை ஓராண்டுக்கு முன்னதாகவே கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார். எனினும் அவரது திட்டம் தோல்வியில் முடிந்து தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது.
2014 தெலங்கானா மாநிலம் ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு நாயுடு மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக்கால கட்டத்தில், கிராம புறங்களை புறக்கணித்தாக கடும் சந்திரபாபு நாயுடு மீது விமர்சனம் எழுந்தது.
2019ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியுடம் படுதோல்வி அடைந்தார்.
சட்டசபையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
தன் மனைவி குறித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸார் இழிவாக பேசுவதாகக் கூறி சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சராகதான் சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டு, அதனை தற்போது நிறைவேற்றிக்காட்டியுள்ளார்
முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் புரிந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த சட்டப்பேரவை தேர்தல் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாழ்வா சாவா என்ற தேர்தலாகக் கருதப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களில் வெற்றி கொடி நாட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
இதையும் படிங்க : 4வது முறையாக ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!
மாநில அரசியலில் மட்டுமின்றி மத்திய அரசியலிலும் கோலோச்சிய
சந்திரபாபு, தேவ கவுடா மற்றும் ஐ.கே, குஜரால் ஆட்சி காலத்தில் தேசிய முன்னணி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
1999-ல், 29 எம்பிக்களுடன் தெலுங்கு தேசம் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் மாறியுள்ளார் நாயுடு.
ஆனால் மாநிலத்தை பொறுத்தவரை சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக அவர் அறிவித்த சூப்பர் சிக்ஸ், திட்டங்களுக்கு உடனடியாக 97 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. 4. 83 லட்சம் கோடி ரூபாய் கடனில் ஆந்திரா சிக்கி
தவிக்கும் நிலையில் 100 நாள்களுக்குள் இந்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)