தமிழ்நாட்டின் மத்தியில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் தொழில் வளத்தில் மட்டும் அல்லாமல் வேளாண்மையிலும் முக்கியமான மாவட்டமாகத் திகழ்கிறது. இங்குள்ள சிறுமலை பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகவும், விவசாயத்தில் முக்கியமான பகுதியாகவும் விளங்குகிறது.
சிறுமலை அடிவாரத்திலுள்ள கிராமங்களில் காணப்படும் சிறப்பான இயற்கை வளம் காரணமாக இப்பகுதியில் பலா, வாழை, எழுமிச்சைப் போன்ற பழ வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிலும் சிறுமலை வாழைப்பழத்திற்கு என தனி மவுசு உள்ளது.
நீர்ச்சத்து குறைவானதாகவும் அதிக சுவை கொண்டதாகவும் விளங்கும் சிறுமலை வாழைப்பழம் பழனி பஞ்சாமிர்தத்தில் முக்கிய பொருளாக உள்ளது. மேலும் சிறுமலை மலை வாழைப்பழத்தின் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் அதற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளும், கடந்து செல்லும் பயணிகளும் தவறாமல் சிறுமலை வாழைப்பழத்தை வாங்கிச் செல்ல வேண்டும் என விரும்பும் அளவிற்குச் சிறுமலை வாழைப்பழம் புகழ்பெற்றதாகும்.
இதையும் படிங்க: சுற்றுலாத் தலமான வரலாற்று சின்னம்… திண்டுக்கல் மலைக்கோட்டையின் சிறப்பம்சங்கள்…
இவ்வாறு சிறப்பு வாய்ந்த வாழைப்பழம் சிறுமலை பகுதியிலிருந்து கொண்டுவந்து திண்டுக்கல் நகர்ப்பகுதியில் உள்ள சிறுமலை சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. சிறுமலை சந்தையில் வாழைக்காய் மண்டி நடத்தி வரும் மணிவண்ணன், வாழைப்பழம் வியாபாரி ஹகிம்சேட் இதுகுறித்து கூறுகையில், “வாரத்திற்குத் திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் வாழைப்பழமானது ஏலத்திற்கு வரும் இந்த வருடத்தில் மழை பொழிவின் போது காற்று அதிகமாக அடித்ததால் வாழைமரம் ஒடிந்து விழுந்து வரத்து குறைந்துவிட்டது.
இதனால் 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனையான கற்ப்பூரவள்ளி தாரானது தற்போது 500 முதல் 700 வரை விற்பனையாகிறது. 800 முதல் 1000 ரூபாய்க்கு விற்பனையான செவ்வாழை தாரானது தற்போது ரூ.1500 முதல் 1600 வரை விற்பனையாகிறது. 3500 ரூபாய்க்கு விற்பனையான சிறுமலை பழமும் தற்போது ரூ.5500 வரை விற்பனையாகிறது. விலை ஏற்றம் ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் வரத்து குறைந்தது வருத்தத்தை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
பொதுவாகச் சிறுமலை மலை வாழைப்பழத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்தச் சிறுமலை மலை வாழைப்பழமானது இயற்கையான மழை நீரில் வளர்கிறது. அதனால் இயற்கையாகவே இது சுவை மிகுந்த பழமாகக் காணப்படுகிறது. இந்த மலை வாழைப்பழத்தில் விதைகள் இருக்காது. மேலும், மருத்துவ குணம் அதிகம் வாய்ந்தவை. இந்த மலை வாழையானது தாராக ஏலம் விடுவதில்லை சீப்சீப்பாக வெட்டி தான் ஏலம் விடுவார்கள். தற்போது மலை வாழைப்பழத்திற்கு நல்ல விலை கிடைத்தாலும் வரத்து குறைந்துள்ளது விவசாயிகள், வியாபாரிகளை கவலையடையச் செய்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
